Friday, March 2, 2012

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்




தோற்றதில்லை தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை. கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை என்ற முழக்கம் எங்கும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. தொழிலாளர் அலுவலகங்களில் தொழில் தாவாக்கள் அப்போதெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை நிறுத்தங்கள், தர்ணாக்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் என தொழிலாளர் பிரச்னைகளை மக்கள் முன் நிறுத்திய பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அப்போது நிரம்பி வழிந்தன. ஒரு வகையான போர்க்குணமிக்க அரசியல் சூழல் அப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. அதற்குக் காரணம் அப்போதிருந்த தொழிற்சாலைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதனாலில்லை. மாறாக ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே ஓரே தொழிலாக நிலவிய நமது கிராமப்புறப் பகுதிகளில் தற்போது பல தொழிற்சாலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. இருந்தும் அப்படிப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் இல்லாமல் போய்விட்டது. முன்பிருந்ததைப் போல் தொழிற்சாலைகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சங்கக் கொடிகள் பறக்கும் காட்சி அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில காலங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளும் இதை அங்கீகரித்து எழுதின: தொழிற்சங்கங்களுக்கு தொழில் வளாகங்களிலிருந்து பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என்று. 

அதன் பின்னர் 2009 ம் ஆண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் குர்காவுன் நகரில் ஹோண்டா கார் உற்பத்தித் தொழிற்சாலையில் ஒரு மாபெரும் தொழிலாளி வர்க்க எழுச்சி தோன்றியது. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது போல் ஹரியானா மாநில அரசின் காவல்துறை எத்தனை அதிகபட்ச அடக்குமுறையை அதற்கு எதிராக ஏவிவிட முடியுமோ அத்தனை கடுமையான அடக்குமுறையை அதன்மீது ஏவிவிட்டது. அதன் பின் 2011 ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஒரு மாபெரும் கிளர்ச்சி தோன்றியது. மாருதி நிறுவனத்தின் கார்களிலேயே அதிகம் விரும்பி வாங்கப்படும் சுவிஃப்ட் ரகத்தைச் சேர்ந்த கார் தயாரிக்கும் மானேசர் கார் தொழிற்சாலையில் அந்தக் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது. காட்டுத்தனமான அடக்குமுறை அதன் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் சமீபத்தில் ஏனம் பகுதியில் ரெஜென்சி ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு பெரும் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது. போராடிய தொழிலாளிகளின் தலைவரான முரளி மோகன் காவல்துறையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதையொட்டி எழுந்த கலவரத்தில் அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். 

இவ்வாறு ஒரு காலகட்டத்தில் எங்கும் நிறைந்திருந்த தொழிலாளர் இயக்கமும் தொழிற்சங்கங்களும் அதன் பின்னர் இல்லாமல் போனது ஒரு தற்செயல் நிகழ்வா? அதன் பின்னர் தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகள் தலைதூக்கி வருவதும் தற்செயலாக நிகழும் ஒன்றா? அடிப்படையில் பின்னணியும் புறக் காரணிகளும் இன்றி எந்த வளர்ச்சிப் போக்குகளும் உருவாவதும் இல்லை; வளர்வதும் இல்லை. இந்த வளர்ச்சிப் போக்குகளுக்கும் புறக் காரணிகள் இருக்கவே செய்கின்றன. மூலதனம் நாடு விட்டு நாடு செல்வது ஒரு முதலாளித்துவ அமைப்பில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்வே. ஆனால் அது உலக வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் ஒரு முழு வீச்சுடன் நடைபெறும் ஒன்றாக 1995, 96 காலங்களில் வந்தது. அதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் உலகச் சந்தைக்காகப் பொருளுற்பத்தி செய்யும் போக்கு தோன்றியது. உலக நாடுகளுக்கிடையிலான பொருள் விற்பனைப் போட்டியில் அத்தனை தொழில் வளர்ச்சி இல்லாத நாடுகளின் பல பாரம்பர்ய உற்பத்திப் பொருட்களின் விலைகளில் பெரும் வீழ்ச்சிகள் ஏற்பட்டன. அதனால் தோன்றிய நெருக்கடியின் சுமை முழுவதையும் அந்தந்த நாடுகளின் முதலாளிகள் அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் தலையில் ஏற்றி வைத்தன. இது காலங்காலமாக நடைபெற்று வரும் ஒன்றே. ஆனால் இப்போது அது நடைபெற்றதற்கும் இதற்கு முன்பு நடைபெற்றதற்கும் ஒரு மிகப்பெரும் வேறுபாடும் இருந்தது. முன்பெல்லாம் தொழில் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர் தலைமீது முதலாளிகள் ஏற்றுவதும் அதனைத் தொழிற்சங்கங்கள் அம்பலப்படுத்துவதும் நிகழ்ந்தது. இப்போது முதலாளிகள் அவ்வாறு தொழிலாளர் மீது சுமைகளை ஏற்றுவது தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நடைபெற்றது. அவ்வாறு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவும் மறைமுகமாக நடைபெறவில்லை. 

மாறாக உலகமயத்தின் அப்பாவிப் பலிகிடாய்களாக நமது முதலாளிகள் ஆகிவிட்டனர் என்ற கருத்தை முன்வைத்துத் தொழிற்சங்கங்கள் அதனை எவ்வித ஒளிவு மறைவுமின்றிச் செய்தன. அதன் விளைவாகத் தான் பஞ்சாலை போன்ற தொழில்களின் முதலாளிகள் நிரந்தரத் தொழிலாளரை ஒழித்தனர். சுமங்கலித் திட்டத்தை அறிமுகம் செய்தனர். தொழிலாளரின் ஓய்வுகாலப் பலன்களை விழுங்கி ஏப்பம் விட்டனர். அவ்வாறு இந்தியாவில் பாரம்பரியத் தொழில்களில் முதன்மையானதான பஞ்சாலைத் தொழிலில் ஏற்பட்ட போக்கு அனைத்து உற்பத்தித் தொழில்களிலும் பிரதிபலித்தது. அந்நிலையில் செயல்பாடிழந்தவையாகத் தொழிற்சங்கங்கள் ஆகிவிட்டன. வேறு நாடுகளில் எப்படியோ ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்த நெருக்கடியிலிருந்து மிக வேகமாக நமது முதலாளிகள் மீண்டு விட்டனர். பஞ்சாலைத் தொழிலில் நிலவிய கோட்டா முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அது பல புது வாய்ப்புகளை நமது பஞ்சாலை முதலாளிகளுக்கு ஏற்படுத்தித் தந்தது. மழைக்காலக் காளான்கள் போல் பஞ்சாலைகள் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாக முளைத்தன. அதைத் தொழிற்சங்கங்கள் கணக்கிற் கொள்ளவில்லை.

உலகமயத்தின் ஒரு விளைவாகத் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில்களின் ஒரு முக்கியத்  தளமாக நமது நாடு ஆகியது. மிகக் குறுகிய காலத்தில் பன்னாட்டு முதலாளிகளின் போட்டியாளர்களாக அத்துறை சார்ந்த நமது முதலாளிகள் வளர்ந்தனர். அவ்வாறு வளர்வதன் பின்னணியில் எத்தனை கொடும் சுரண்டல் இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் அந்த ஆலைகளில் தொழிற்சங்கம் என்பது வரவும் இல்லை; தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் அத்தொழிலாளர்களுக்கு இல்லை. சேவைத் துறையில் இங்கு நுழைந்த வேற்றிட வேலைவாய்ப்பை ஒட்டி உற்பத்தித்துறைத் தொழில்களிலும் பன்னாட்டு மூலதனம் வரத்தொடங்கியது. அத்தொழில்களும் இங்கு தோன்றி வளரத் தொடங்கின. நமது நாட்டில் மிகக் குறைந்த கூலிக்கு தொழில் நுட்ப அறிவு பெற்ற தொழிலாளர் கிடைப்பதற்கிருந்த மிகப்பெரும் வாய்ப்பு அதற்குக் காரணமாக இருந்தது. அதனால் கார் தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு வரத் தொடங்கின. தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் வேறு நாடுகளிலும் நமது நாட்டிலும் பணிபுரியும்  தொழில்நுட்ப அறிவு பெற்ற தொழிலாளர்களின் வாங்கும் சக்தியில் ஏற்பட்ட உயர்வினை அடிப்படையாகக் கொண்டு கார், கட்டுமானம் மற்றும் நுகர்பொருள் தொழில்களில் வளர்ச்சி ஏற்பட்டது. அவை சார்ந்த தொழில்கள் பல உருவாயின. 

ஆனால் முதலாளிகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்த தொழிற்சங்கங்களின் போக்கில் மட்டும் மாற்றம் இல்லை. அவை தொழிற்சங்கங்கள் அமைப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதை மையமாக வைத்துத் தான் தொழிற்சாலைகளின் வரைபடத்திலிருந்து தொழில் உற்பத்தியின் முக்கியக் காரணியான தொழிலாளரின் உரிமைகளுக்குப் போராடும் அமைப்பு துடைத்தெறியப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தொழிலாளரிடையே போராடும் சூழ்நிலையை உருவாக்கும் சமூகத்தின் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டை அவ்வாறு துடைத்தெறிய முடியாது. அது எப்படியாவது வெளிப்பட்டே தீரும். அதனால் தான் எத்தனை அடக்குமுறைகள் அதன் மீது திணிக்கப்பட்டாலும் குர்காவுனிலும் ஏனாமிலும் அது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது.

இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் ஜனநாயகம் பல உரிமைகளை அனைத்து மக்களுக்கும் வழங்குவதாக கூறப்பட்டாலும் இந்த அமைப்பில் தனக்கென சொத்தேதும் இல்லாத உழைக்கும் வர்க்கத்திற்கு இருக்கக்கூடிய ஒரே ஜனநாயக உரிமை சங்கம் சேர்த்துப் போராடும் உரிமை மட்டுமே. அதனை நாசூக்கான பல பெயர்களில் தடுக்கும் போக்கே தற்போது தலைவிரித்தாடுகிறது. நமது நாட்டை வல்லரசு ஆக்குவது, அன்னிய முதலீடு வருவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்குவது, தொழில் அமைதிக்கு வழிவகுப்பது என்ற பெயர்களில் அரசு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்க முயல்கிறது. அதற்காகத் தொழிற்சங்கச் சட்டங்களில் வேலைப் பாதுக்காப்பினை இல்லாமல் செய்யும் பல ­ரத்துக்களைச் சேர்த்து வருகிறது. 7 பேர் இருந்தால் கூட சங்கம் அமைக்க முடியும் என்றிருந்த தொழிற்சங்கச் சட்டத்தினை மாற்றி குறைந்தபட்சம் 100 பேர் அதற்கு வேண்டும் என்று சட்டத்தைத் திருத்தியுள்ளது. வேலை நீக்கத்தை எளிதாக்கும் வகையில் தொழில் தகராறு சட்டத்திலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதனை இன்னும் பல வகைகளில் கொண்டுவர உத்தேசித்தும் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை அப்பட்டமாகவே தடை செய்யப்பட்டுள்ளது. 

ஒருபுறம் அரசு தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுக்க இவ்வாறு வரிந்து கட்டிச் செயல்படும் வேளையில் தனது பங்கிற்குத் தொழிற்சங்கங்கள் என்று செயல்படும் நமது நாட்டின் அமைப்புகள் அதற்கு எந்த எதிர்ப்பும் தராமல் தொழிற்சங்கம் அமைக்கும் போக்கினை உள்ளிருந்தே முடமாக்கும் வேலையைச் செய்கின்றன. தற்போது அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உற்பத்தித்துறையை மேம்படுத்தும் திட்டப்படி அக்கொள்கை அடிப்படையில் உருவாக்கப்படும் தொழில்களில் வேலைசெய்யும் தொழிலாளருக்கு எந்தவகை வேலைப் பாதுக்காப்பும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் அவர்களை வேலையைவிட்டுத் தூக்கிவிட முடியும். அதற்கு ஒரு சிறு இழப்பீட்டினை மட்டும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று கூறப்படுகிறது.

வேலைப் பாதுகாப்பு மட்டுமின்றி தொழிற்சங்கம் இல்லாததால் தொழிலாளரின் கூட்டு பேர உரிமையும் பாதிப்புக்கு ஆளாகி சம்பள உயர்வு போன்றவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது. தற்போது ஏனம் ரெஜென்சி தொழிற்சாலையில் தோன்றிய பிரச்னையும் இன்று அனைத்துத் தொழில்களிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பிரச்னைகளும் ஒப்பந்தத் தொழிலாளராக பலரை நியமித்து ஆலையின் நிரந்தரத் தொழிலை நடத்துவதால் ஏற்பட்டவையே. 800க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளரின் கூலி உயர்வுப் பிரச்னையே இத்தகைய கொடும் அடக்குமுறைக்கும் அதை ஒட்டிய வன்முறைக்கும் காரணமாகும். இத்தொழிலில் மட்டுமின்றி தற்போது புதிதாக தோன்றி வளர்ந்துவரும் பொறியியல் சார்ந்த தொழில்கள் அனைத்திலும் இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளராக மிக அதிகத் தொழிலாளரை வைத்து நிரந்தரத் தொழில்களைச் செய்வதும் அதன்மூலம் உழைப்பாளரைச் சுரண்டிக் கொள்ளை லாபம் ஈட்டுவதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

நாம் முன்னர் பார்த்தது போல் எப்படித் தடுத்தாலும் சமூகத்தில் உள்ள வர்க்க முரண்பாடு வெடித்துக் கிளம்பத்தானே செய்யும். அவ்வாறிருக்கையில் அதற்காக பிரத்தியேகமாகத் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி இங்கு எழலாம். தொழிற்சங்க உணர்வு  தொழிலாளரிடம் இயற்கையாகவே வருவது. ஆனால் அதனை அரசியல் ரீதியாக வழிகாட்டவல்ல அரசியல் உணர்வு ஒரு சரியான பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியினால் தொழிற்சங்க இயக்கத்திற்குள் வெளியிலிருந்து கொண்டுசெல்லப் படுவது. அப்படிப்பட்ட சரியான அடிப்படை அரசியல் வழியினைக் கொண்ட பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியின் வழிகாட்டுதல் இல்லாததால்தான் பல தொழிற்சங்கங்களின் இந்திய முதலாளிகள் குறித்த பார்வையில் ஏற்பட்டுள்ள கோளாறும், அதன் விளைவாகத் தற்போது நிலவும் அவலநிலையும் தோன்றியுள்ளது. அதாவது செயல்பட்டுக் கொண்டிருந்த பல தொழிற்சங்கங்கள் பெயர்ப்பலகைத் தொழிற்சங்கங்களாக மாறியுள்ளன. தொழிற்சாலைகள் பல பெருகியும் அத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளரிடம் தொழிற்சங்க உணர்வு ஹோண்டா, மாருதி, ரெஜென்சி ஆகிய நிறுவனங்களில் தோன்றியது போல் தோன்றவில்லை. தொழிற்சங்கம் கொண்டுவருவதற்கான போக்கு நிரம்பித் ததும்பியும் அது தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப் படாமல் தேங்கிவிடுகிறது. 

இந்த அவலநிலையைப் போக்கி தொழிலாளர் இயக்கத்தை அதன் வர்க்க விடுதலை என்ற திசை வழியை நோக்கி வழிநடத்துவது இன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலையாய கடமையாகும். முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றம் என்ற சரியான அடிப்படை அரசியல் வழியின் வழிகாட்டுதலில் செயல்படும் ஒரு சரியான அமைப்புதான் அக்கடமையினைச் செவ்வனே ஆற்ற முடியும். அத்தகைய அமைப்பான சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) அந்த வரலாற்றுப் பணியினைச்  சிரமேற்கொண்டு செய்யும் முனைப்புடன் உள்ளது. உணர்வுமிக்க உழைக்கும் வர்க்க அமைப்புகளை ஏற்படுத்தும்அதன் முயற்சிகளுக்கு முழு ஆதரவினை நல்கி தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்லத் துணை நிற்குமாறும், அதற்குத் தங்களாலான உதவி புரியுமாறும் கரத்தாலும் கருத்தாலும் பாடுபடும் தொழிலாளரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

                            கருத்தரங்கம் 


நாள் : 26 .02 .2012  ( ஞாயிறு ). மாலை 6 மணி முதல் 9 மணி வரை  ,

இடம்:  மதுரை, மணியம்மை  மழலையர் & தொடக்கப்பள்ளி ,

( வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரில் ) 

சிறப்புரை :தோழர்.அ.ஆனந்தன், தென் இந்தியப் பொது செயலாளர், சி.டபிள்யு.பி.

சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), தமிழ்நாடு.

தொடர்பு முகவரி : அழகு முருகன் காம்ப்ளக்ஸ் , ஆதவன் டுயூசன் செண்டர் மாடியில் , நத்தம் மெயின் ரோடு , நாராயணபுரம் , மதுரை - 14 . 

தொடர்பிற்கு :கு. கதிரேசன் ( பொறுப்பாளர் சி.ஓ.ஐ.டி.யு.): 9843464246

No comments:

Post a Comment