Saturday, June 2, 2012

இருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்




கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய  மே தினப்பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் , எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளி எதிரில்  27 . 05 . 2012 அன்று நடைபெற்றது. உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி தலைவர் தோழர். வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் தோழர்.வரதராஜ் பேசும்போது பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகளின் மேத்தனப்போக்கே ஆகும், மே தின தியாகிகள் எந்த காரணத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்தார்களோ அந்த நோக்கத்தை இன்னும் அடையமுடியாத நிலையிலையே இன்றும் உழைக்கும் வர்க்கம் இருக்கிறது , இதை அம்பலப்படுத்தி தொழிலாளர்களை அமைப்பாக்கி வருகிறது CWP  என்று குறிப்பிட்டார். 

விருதுநகர் மாவட்ட அச்சகத்  தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் செல்வராஜ் தனது உரையில் பெட்ரோல் விலையுயர்வை அரசு தாறுமாறாக உயர்த்தியபோதும் அதை தட்டிகேட்கமுடியாத நிலையிலையே இன்றைய உழைக்கும் வர்க்கம் இருக்கிறது இதற்கு காரணம் அமைப்பாக உழைக்கும் வர்க்கம் ஓன்று படாததே ஆகும், அதனால் வலிமையான அமைப்பாக அணி திரள்வோம் என்று அறைகூவல் விடுத்தார். 

 விருது நகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ஜெகநாதன் பேசும்போது மே தின தியாகிகளின் தியாகத்தால்  பெற்ற 8 மணி நேர வேலை என்பதை பீஸ் ரேட் முறையாலும் இன்னும் பல புது புது யுக்திகளின் மூலம் இன்று முதலாளிகள் இல்லாமல் செய்து விட்டனர் அதை உழைக்கும் வர்க்கம் போராடி வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார். அரசு ஊழியர் சம்மேளனத்தில்   இருந்து கலந்து கொண்ட தோழர் . வதிலை சத்தியா தனது உரையில் இன்று கல்வி என்பது முழுக்க முழுக்க கல்வி முதலாளிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு விட்டது அவர்கள் அளிக்கும் கல்வியானது ஒரு தொழிற்சாலையில் அவன் வேலை செய்வதற்கு மட்டுமானதாகவே உள்ளது, அப்படி அதிக கட்டணம் கொடுத்து படிக்கும் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் தங்கராஜ் தனது உரையில் 8 மணி நேர வேலை என்ற நியாயத்தை கேட்டதற்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தான் மே தின தியாகிகள் அதே நிலைமை தான் இன்றும் நிலவுகிறது தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை கேட்டதற்காக வேலையை விட்டு நீக்கப்படுவதும், பொய் வழக்கு புனைந்து சிறையில் தள்ளப்படுவதுமான நிலையே நிலவுகிறது இந்த நிலை மாற உழைக்கும் மக்கள் பலம் வாய்ந்த சக்திகளாக உருவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

 சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஒருங்கிணைப்பாளர்  தோழர் கதிரேசன் தனது உரையில் முதலாளித்துவம் அதன் காட்டுத்தனமான சுரண்டலில் நிலைத்திருப்பதாக நினைத்துக்கொண்டாலும் அதுவே அதற்கான சவக்குழியை வெட்டிக் கொண்டிருகிறது  , விலைவாசி ஏற்றம் , வேலையில்லாதிண்டாட்டம் ஆகியவற்றால் உழைக்கும் மக்கள் உலகமெங்கும் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டுருக்கிறார்கள் , இந்த வருடம் நடைபெற்ற மே தினப் பேரணிகளில் உலகம முழுவதும் பெருந்திரளான எண்ணிக்கையில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும் என்ற கோசத்துடன் ஊர்வலமாக சென்றனர்.  செவிலியர்கள் நாடு முழுவதும் அவர்களாக வீதிக்கு வந்து சம்பள உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் முதல் ஆளாக COITU  நிற்கும் என்று குறிப்பிட்டார் .   

 மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.சிவக்குமார் பேசிய போது பெட்ரோல் விலையுயர்விற்கு காரணமானவர்களே அதை கண்டித்து போராட்டம் நடத்துவது என்பது கேலிக்கூத்தாகும் என்று குருப்பிட்டார்., கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் ( CWP ) யின் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர். அ. ஆனந்தன் தனது சிறப்புரையில் மே தின தியாகிகள் வழக்கு விசாரணையின் போது தாங்கள் என்ன பேசினாலும் இந்த நீதிமன்றம் அதைக் கேட்கப் போவதில்லை அதனால் பேசமால் அமைதி காத்தே இந்த நீதிமன்றம் உட்பட இந்த கேடுகெட்ட முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துவோம் என்று அமைதிகாத்தனர் ஆனால் அவை வரலாற்றில் பக்கம் பக்கமாக பேசப்பட்டது. ஒரு காலத்தில் பஞ்சாலைகளில் வலுவுடன் இருந்த தொழிற்சங்கங்கள் இன்று வலுவிலந்துவிட்டன ,   பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டத்தில் வைத்து பெண்கள் கடுமையாக சுரண்டப்படுவதை கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கும் மோசமான சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் இருகின்றன , தாங்க முடியாத நெருக்கடியே மக்களை போராட்ட முனைக்கு கொண்டுவரும் என்று பேசினார்.


நூற்றுக்கணக்கான தோழர்களும் , திருத்தங்கல்  வாழ் பொது மக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை சிறப்புடன் நடைபெற்றது, 

No comments:

Post a Comment