Wednesday, February 1, 2012

SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)


              கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் ,
தமிழ்நாடு 

முன்னுரை 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வரலாற்றுடன் பங்கேற்றதும் பரந்த அளவில் மக்கள் ஆதரவினைப் பெற்றிருந்ததும் இந்தியப் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துத் தரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு முன்பும் , சுதந்திரமடைந்த பின்னரும் பல அடிப்படைத் தன்மை வாய்த்த தவறுகளைச் செய்தது. சுதந்திரமடைந்திற்கு முன்பு இந்திய விடுதலைப் போரில் சமரசமற்ற போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து இந்திய விடுதலைப் போரையே ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சி தவறியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தை புரட்சியின் நேச சக்தியாகச் சித்தரிக்கும்  ' தேசிய ஜனநாயகப் புரட்சி ' திட்டத்தை அது தனது அடிப்படை அரசியல் வழியாக முன் வைத்தது. அக்கட்சியும் அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) உட்பட பல கட்சிகளும் இன்று வரை எந்த முதலாளி வர்க்கம் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ளதோ அந்த முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகச் சித்தரிக்கும் ஏதாவதொரு அடிப்படை அரசியல் வழியையே இன்றும் பின்பற்றி வருகின்றன. இதனால் பொங்கிப் பிரவாகித்த மக்கள் எழுச்சி பல தருணங்களில் திசை திருப்பப்பட்டு முடங்கிப் போனதோடு இக்கட்சிகள் அனைத்தும் அப்பட்டமான வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி நாடளுமன்ற மற்றும் தேசியவாதச் சேற்றிலும் சகதியிலும் புரளும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இன்றும் நாம் வேதனையுடன் கண்ணுறுகிறோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய இமாலயத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டதோடு சர்வதேச சூழ்நிலைகளையும் துல்லியமாக ஆய்ந்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அடிப்படை அரசியல் வழியாக முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையினை முன் வைக்கும் SUCI கட்சியினை பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சிப்தாஷ் கோஷ் அவர்கள் 1948 ம் ஆண்டு ஸ்தாபித்தார். தோழர்.சிப்தாஷ் கோஷின் தலைமையில் செயல்பட்டு பல அறிய வழங்கல்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கும் மார்க்சிஸ - லெனினிஸக் கருவூலத்திற்கும் நல்கும் அளவிற்கு இருந்த அக்கட்சி அவரது மறைவிற்குப் பின் போர்க்குணமிக்க இயக்கம் கட்டும் பாதையினைக் கைவிட்டு சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டை மட்டும் நடத்த வல்லதாக ஆகியது. அதன் விளைவாக கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமிக்க போராட்டத்தை தக்க வைக்கத் தவறியதோடு மார்க்சிஸம் - லெனினிஸத்தையும் தோழர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளையும் வரட்டுச் சூத்திர வாதங்கள் போல் ஆக்கி செயல்படத் தொடங்கியது. இத்தகைய செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவாக கட்சியின்  அடிப்படை அரசியல் வழியிலையே தடம் புரளல் ஏற்பட்டு இந்தியாவில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் அக்கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை  பிரதானப்படுத்தி உள்நாட்டு முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அக்கட்சி இத்திசை வழியில் நடத்திய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு' அதன் இத்தகைய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய போக்குகள் கட்சியில் ஏற்ப்பட்டதை மையமாக வைத்து கடுமையான கருத்து வேறுபாடுகள் கட்சியின் மத்திய மாநில அளவிலான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டத்தில் ஏற்ப்பட்டன. அக்கருத்து வேறுபாடுகளை மார்க்சிஸ – லெனினிஸ அடிப்படையிலான ஒரு முழுமையான மனம் திறந்த விவாதத்தின் மூலமாகத் தீர்ப்பதற்கும் கட்சியினை சரியான திசை வழியில் நடத்திச் செல்வதற்கும் பதிலாக கருத்து வேறுபாடுகளை முன் வைத்த தோழர்களுக்கு எதிராக துஸ்பிரச்சாரங்களையும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்துவிடும் சீரழிந்த நிலைக்கு தற்போதைய SUCI கட்சியின்  தலைமை தள்ளப்பட்டு விட்டது. 

பரந்துபட்ட மக்கள் மற்றும் வர்க்க இயக்கங்கள் கட்டுவதற்கு முன்னுரிமை தராது சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டிற்கு மாத்திரமே வழிகாட்ட வல்லதாக தற்போதைய SUCI கட்சியின் தலைமை மாறிப்  போனதால் உட்கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமுள்ள போராட்ட வாழ்க்கை முறை இல்லாமல் போனதோடு , தலைமையிடத்திலும் இயந்திர கதியிலான சிந்தனைப் போக்கு தோன்றியது. அது கட்சியைப் படிப்படியாக புரட்சிகரத் தன்மையற்றதாக ஆக்கி விட்டது. அந்நிலையில் தோழர் சிப்தாஸ் கோஷ் உயர்த்திப் பிடித்த அந்த மார்க்சிஸம் - லெனினிஸப் பதாகையின் கீழ் செயல்பட உறுதி பூண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் பிஹார் மாநிலம் பாட்னா நகரில் 1996 ம் ஆண்டு ஜூன் 15 முதல் 17 வரையிலான நாட்களில் பஞ்சாயத்து சமிதி ஹாலில் கூடினர். SUCI- கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட வேறுபாடுகள் குறித்தும் அவற்றின் தன்மை குறித்து அவர்கள் அக்கூட்டத்தில் தீர்க்கமாக விவாதித்தனர். அத்தகைய விவாதத்தின் விளைவாக ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது தான் " நமது  கருத்து வேறுபாடுகள் " என்று இந்த ஆவணம். SUCI- யின் சீரழிவினை வெளிக் கொணர்வதோடு நின்று விடாமல் SUCI  அனுபவத்திலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டு இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியினைக் கட்டியமைக்கும் வரலாற்றுக் கடமையினையும் நிறைவேற்ற வேண்டும் என்ற வரலாற்று பூர்வ முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கிணங்க தோழர் சிப்தாஸ் கோஷின் சக தோழரான தோழர்.சங்கர் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் " கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் " என்ற அமைப்பு தொடங்கப்பட்டுத் தற்போது பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலக் கிளை " நமது கருத்து வேறுபாடுகள் " என்ற இந்த ஆவணத்தை தமிழில் மொழி பெயர்த்து வழங்குவது அவசியம் எனக் கருதியதன் அடிப்படையில் தற்போது இந்த ஆவணம் தமிழில் வெளிவந்துள்ளது. அனைத்து அம்சங்களையும் தழுவிய முழுமை பெற்ற ஒன்றாக இந்த ஆவணம் இல்லாவிடினும் SUCI கட்சியுடனான நமது முக்கிய கருத்து வேறுபாடுகளையும், SUCI கட்சியின் தடம் புரளல்களையும் இது தெளிவாகவே விவாதிக்கிறது. அடிப்படையில் SUCI கட்சியின் தற்போதைய தலைமையை விமர்சித்து எழுதப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும்  இந்த ஆவணம் கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று எதிர் கொண்டுள்ள பல சித்தாந்த மற்றும் நடைமுறைப் பிரச்சனைகள் குறித்தும் பல கருத்துகளை முன் வைக்கக்கூடியதாக உள்ளது. அதனால் இந்த ஆவணம் இந்தியப் புரட்சியில் உண்மையிலையே அக்கறை கொண்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் பயன்படத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.

அத்தகைய ஆவணத்தை முடிந்த அளவு தமிழ் மொழியின் மரபுக்குகந்த வகையில் மொழி பெயர்த்து தமிழக உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கும் அதே வேளையில் இதில் எங்கேனும் சொல் அல்லது பொருளில் குறை அல்லது போதாமை இருப்பின்  அதற்கான முழுப் பொறுப்பும் மொழி பெயர்ப்பாளர்களாகிய எங்களைச் சார்ந்ததேயன்றி இந்த ஆவணத்தை சார்ந்ததல்ல என்று கூற கடமைப்பட்டுள்ளோம். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அமைப்பினை அடையாளம் காணவும், அதனை வலுப்படுத்தவும் உதவக் கூடிய ஒன்றாக இந்த ஆவணம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இதனை தமிழக உழைக்கும் வர்க்கத்தின் முன் பணிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.
                                                       
 கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்(CWP )

மதுரை 
ஆகஸ்ட் 2002  


நமது கருத்து வேறுபாடுகள்

(Our Differences)

1988ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே பல்வேறு விசயங்களில் SUCI  - கட்சியின் தற்போதைய தலைமையின் அணுகுமுறையும் நடத்தைகளும் மார்க்ஸிசம்- லெனினிஸம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் பற்றிய சரியான புரிதலின் அடிப்படையிலானதாக இருக்கவில்லை. அவற்றில் சில கட்சியின் சமூக  - அரசியல் திட்டங்கள் தொடர்பானவை. வேறு சில விஷயங்களோ கட்சியின் உட்கட்சி வாழ்க்கை தொடர்பானவை. உண்மையில் இப்பாதை விலகல்களை பாதை விலகல்களே என புரிந்து கொள்வதற்கு மிகுந்த நேரம் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் அத்தகைய கருத்து வேறுபாடுகள் அனைத்தும் தொழிலாளிவர்க்கத்தின் புரட்சிகர கட்சிகளில் இயற்கையாக நடைபெறக்கூடிய சரியானவற்றிற்கும் தவறானவற்றிற்கும் இடையிலான - போராட்டம் என்றே தோன்றியது. கட்சியில் ஒருமித்த சிந்தனை (Uniformity of thinking) யை அடைவதற்காக ஒற்றுமை - போராட்டம் - ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட போராட்டமும் பெரும்பாலான பிரச்னைகளில் மிகக்குறைவான பலனையே கொடுத்தது; இல்லையென்றால்   எந்தவித பலனையும் கொடுக்கவில்லை. இன்னும் சரியாக சொல்லப்போனால், இக்கருத்து வேறுபாடுகளின் அளவும் ஆழமும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே சென்று இறுதியாக அவை நடைமுறையில் அனைத்து பிரச்னைகளையும் தழுவிய ஒன்றாக ஆகிவிட்டது. இது, நமது கருத்து  வேறுபாடுகளின் வேர்கள் பெரிதளவில் அணுகு முறையில் இருக்கும் வேறுபாடுகளிலேயே ஆழமாக அமைந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. 
மார்க்ஸிசம் - லெனினிஸம் பொருள்களின் வெளிப்புற வடிவத்தைக் காட்டிலும் அப்பொருள்களின் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் உண்மையான உள்ளியல்பு ஆகியவற்றையே வலியுறுத்துகின்றது. எனவே தான் உண்மையான மார்க்சிஸ - லெனினிஸவாதி என்ற முறையில் தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தொழிலாளி வர்க்கக் கட்சியினை இந்த மண்ணில் கட்டியமைக்கும் வேளையில், நன்கு வரையறுக்கப்பட்ட அமைப்புச்சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமோ அதனை சம்பிரதாய ரீதியில் நடைமுறைப்படுத்துவதன் மூலமோ ஒரு சரியான லெனினிச முன்மாதிரிக் கட்சி கட்டியமைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த முடியாது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். ஆகவே, அமைப்புச் சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்குமுன் அவ்வகை முறைகளை நடைமுறைப்படுத்துவதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு ஒட்டு மொத்த தோழர்களின் தத்துவார்த்த அறிவின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இந்த விதிமுறையில் இருந்து துளியும் பிசகாமல் இருப்பதற்காகத்தான் 1948 ம் ஆண்டின் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நீண்ட காலத்திற்கு மரபொழுங்கு சார்ந்த நடைமுறை ( Conventional line of practice ) களின் படியே கட்சி செயல்பட்டது. அமைப்புச்சட்டம் சார்ந்த நடைமுறை (Constitutional  line of practice ) களின் படி செயல்படவில்லை. 
  
ஆனால் கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே மேற்சொன்ன இந்த அணுகுமுறையில் இருந்து கட்சியின் தற்போதைய தலைமை விலகத் தொடங்கியது. அது எல்லாவற்றையும் சம்பிரதாய ரீதியிலும் எந்திர கதியிலான வழிமுறையிலும் அணுகத் தொடங்கியது. கட்சியின் "லெனினிச முன்மாதிரிக் கட்சி " ( Party of Leninist  Model ) யாக ஆக்குவதற்கான தனது முயற்சியில் கட்சியின் தற்போதைய தலைமை அப்போதைய ரஷ்யாவின் லெனின் தனது கட்சியை கட்டியமைப்பதில் என்னென்ன செய்தாரோ அவற்றை இனம் வாரியாக  அப்படியே குருட்டுத்தனமாக செய்யத் துவங்கியது. லெனின் தனது கட்சியில் மத்தியக் கமிட்டியைத் தவிர்த்து ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தையும் ( Control Commission ) ஒரு மத்திய பதிப்பாசிரியர் குழு ( Central Editorial Board ) வையும் கட்சி மாநாட்டில் இருந்து தேர்ந்தெடுத்திருந்தார் என்பதற்காகவே SUCI கட்சியின் தலைமையும் அதன் தலைவர் தோழர் நிஹார் முகர்ஜியின் வேண்டுகோளின் படி ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தையும், ஒரு மத்திய பதிப்பாசிரியர் குழுவையும் தனது கட்சி மாநாட்டின் மூலம் தேர்ந்தெடுத்தது. லெனின் தனது கட்சியான RSDLP யில் நிலவி வந்த குழுவாத மனப்பான்மையின் தொடர்விளைவுகளில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டியிருந்தது. எனவே , அக்குழுவாத மனப்பான்மையினால் இழைக்கப்படும் அநீதிகளால் எந்தவொரு தோழரும் பாதிக்கப்படாதவாறு கட்சியின் கட்டுப்பாட்டு ஆணையம் பார்த்துக் கொள்ளும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரால் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் மத்திய பத்திரிக்கையின் மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையைப் போலவே கட்சி முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவோ மத்திய பதிப்பாசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது. இவ்விரு அமைப்புகளும் மத்திய கமிட்டியைப் போலவே சமமான அதிகாரங்களைப் பெற்றிருக்கும். 

இங்கு அவ்வாறு செய்வதற்கு அவசியமான சூழ்நிலைகள் எதுவும் உண்மையில் இருக்கவில்லை. ஆனாலும் லெனின் செய்தார் என்பதற்காகவே அது இங்கும் செய்யப்பட்டது. SUCI ன் கட்டுப்பாட்டு ஆணையம் , அதன் மத்திய கமிட்டியின் கீழமைந்த துணைக் கமிட்டியாகவே நடத்தப்பட்டது. அது தனது முடிவுகள் பற்றி மத்தியக் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பதிப்பாசிரியர் குழு, கட்சியின் அனைத்து மத்திய பத்திரிகைகள் மற்றும் வெளியீடுகளை பதிப்பித்தல் மற்றும் வெளியிடும் வேலைகள் எதையும் ஒருபோதும் செய்ததில்லை. கட்சி மாநாட்டின் மூலம் இந்த அமைப்புகளை தேர்ந்தெடுத்தது லெனினை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றுவதற்காகத்தானே யொழிய உண்மையான தேவையை முன்னிட்டு அல்ல என்பதையே இவை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கின்றன. 

மேலும், கட்சி மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தோழர் பாடிக் கோஷ் மட்டுமே மேற்குவங்காள மாநில கட்சி தனக்கு எதிராக எடுத்த சில முடிவுகளை எதிர்த்து நீதி கேட்டு கட்டப்பட்டு ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளார். நியாயமாகப் பார்த்தால், மேற்கு வாங்க மாநிலக்கட்சி தனக்கு தீங்கு விளைவித்து விட்டதாக தோழர் பாடிக் கோஷ் கருதினால், அவர் முதலில் மத்திய கமிட்டியிடம் முறையிட்ட பின்னரே தன்னிடம் முறையிட வேண்டும் என்று தான் கட்டுப்பாட்டு ஆணையம் அவருக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அது அவ்வழக்கை விசாரித்து மத்திய கமிட்டிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. அனேகமாக கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தனது செயல்பாட்டை பதிவு செய்து கொள்வதற்குக் கிடைத்த ஒரே ஒரு அறிய வாய்ப்பையும் நழுவ விட மனமில்லாததால் கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வாறு செய்திருக்கலாம். மத்தியக்கமிட்டியோ இன்னும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடந்து கொண்டது.  அது கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவரையே தனது சொந்த கையெழுத்தில் தோழர் பாடிக் கோஷ்-ற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வழங்குமாறு செய்தது. இதன் மூலம் கட்சியின் மத்தியக் கமிட்டி உட்பட எந்தவொரு கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ப்பான முடிவால் தனக்கு நீதி வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட தோழர் கருதினால் அம்முடிவிற்கு எதிராக கட்டுப்பாட்டு ஆணையத்திடம் நீதி கேட்கலாம் என்று கட்சி மாநாட்டின் மூலம் அனைத்து உறுப்பினர்களும் வழங்கப்பட்ட மிகுந்த பொருள் செறிந்த அமைப்புச்சட்ட உரிமை தோழர் பாடிக் கொஷிற்கு மறுக்கப்பட்டது. 

இருப்பினும் , இவை அனைத்தும் கட்சியின் தற்போதைய தலைமையின் அணுகுமுறை எவ்வாறு எந்திரகதியிலும் , சம்பிரதாய ரீதியிலும் அமைந்துள்ளது என்பதை காட்டுவதற்கான உதாரணங்களாகவே இங்கு குறிப்பிட்டப்பட்டுள்ளன . கட்சியின் தற்போதைய தலைமையைப் பொறுத்தவரை லெனின் வழிநடப்பது என்பது லெனின் செய்ததை அப்படியே குருட்டுத்தனமாக செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை. மத்திய பதிப்பாசிரியர் குழு அல்லது கட்டுப்பாட்டு ஆணையம் மட்டுமல்ல கட்சியின் அரசியல் தலைமைக்குழு ( Polit bureau ) என்று சொல்லப்படும் அமைப்பும் இதற்கு மற்றொரு உதாரணமாகும். லெனின் தனது கட்சியில் அரசியல் தலைமைக்குழு ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காகவும் லெனினிசக் கட்சி என்று கூறிக்கொள்ளும் அனைத்தும் கட்சிகளிலும் ஒரு அரசியல் தலைமைக்குழுவை உருவாக்கியது. ஆனால், அக்குழு உறுப்பினர்களின் பெயருக்கு முன்னாள் அல்லது பின்னால் , " அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் " என்ற சொற்றொடரை அலங்காரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே அக்குழு பயன்பட்டது. இதைத் தவிர இந்த அரசியல் தலைமைக்குழு உருவான காலம் முதல் வேறு எவ்வழிகளிலும் அது ஓர் அரசியல் தலைமைக் குழுவாக செயல்பட்டதில்லை. இந்த எட்டு ஆண்டு காலத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளை தீர்மானிப்பதற்கான ஓர் அமைப்பு என்ற முறையில் அமர்ந்து விவாதிப்பதற்கு இந்த அரசியல் தலைமைக் குழுவிற்கு ஒரு வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை. ஏன் அரசியல் தலைமைக்குழு அமரவில்லை என்பது விவாதற்குரிய கேள்வி அல்ல. மாறாக, அது அமர்வதற்கான உண்மையான தேவையே இல்லை எனில், ஏன் அது உருவாக்கப்பட்டது? ஏன் அது காகிதங்களிலும் கடிதங்களிலும் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது? என்பவையே விவாதற்குரிய வினாக்களாகும். 

லெனினை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றுவதன் மூலம் ஒரு லெனினிச முன்மாதிர்கிக்கட்சியை கட்டியமைக்க முடியுமா? அல்லது வரலாற்று ரீதியில் தீர்மானிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றத்தக்கதொரு கட்சியை லெனின் எச்சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையில் உருவாக்க வேண்டியிருந்ததோ அக்குறிப்பிட்ட யதார்த்த சூழ்நிலையை பகுத்தாரய்வதற்காக லெனின் எந்த ஆய்வுமுறை ( Method ) மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தினாரோ அந்த ஆய்வுமுறை அல்லது வழிமுறைகளை தனது சொந்த மூளையைப் பயன்படுத்தி உள்வாங்கி அதனை செயல்படுத்துவதன் மூலம் ஒரு லெனினிச முன்மாதிரிக்கட்சியை கட்டியமைக்க முடியுமா ? என்பதே  நம் முன்னுள்ள கேள்வியாகும். 

இவை மட்டுமல்ல, கருத்தரங்கங்கள் அல்லது மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கூட கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி அமைப்பு ரீதியான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட செய்தித் தாள்கள் மற்றும் வீடியோ பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்வது மற்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பிரம்மாண்டம் போல் காட்டுவது போன்ற மேலோட்டமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது. தொழிலாளி வர்க்க புரட்சிகரக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கையின் முக்கியத் துண்களான ஆய்வுமுறை பற்றிய கருத்துகள் ( Concepts of Method ) நடத்தை விதிமுறை ( Code of Conduct ) , நான்கு கீழ்ப்படிதல்கள் (Four Submissions) போன்றவைகள் பற்றிய இத்தலைமையின் புரிதல் என்பது சம்பிரதாய ரீதியிலான - கோட்பாட்டளவிலான - எந்திர கதியிலான - புரிதலாகும்.

(1 ) காஷ்மீர் பிரச்சனை (2 ) ஜார்கண்ட் பிரச்சனை (3 ) கட்சியின் மொழிக் கொள்கை ( 4 ) சோஷலிச முகாம் இருக்கிறதா ? இல்லையா? என்பது பற்றிய கேள்வி மற்றும் இன்னும் அது தொடர்பான பிற கேள்விகள் குறித்து கட்சியின் தற்போதைய தலைமையுடன் ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதித்து அப்பிரச்சனைகள் தொடர்பான கட்சியின் நிலைபாட்டை புதிதாகத் தீர்மானிப்பதற்காக விரிவான விவாதக் கூட்டம் ஒன்றுக்கு மத்தியக்கமிட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி முறைப்படி எழுத்து மூலமான கோரிக்கை 1992 ம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. ஆனால் , மத்தியக்கமிட்டியோ ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அப்பிரச்சனைகளை இன்று வரை தனது அலமாரியில் அடுக்கி வைத்துள்ளது. இப்பிரச்சனைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை மத்திய கமிட்டியிடம் எழுத்து மூலமாக எழுப்புவதற்கு முன்னர் அப்பிரச்சனைகளில் சில தலைப்புக்கள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாத விவாதங்களும் சில தருணங்களில் மத்தியக் கமிட்டியில் நடைபெற்றது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அத்தகைய விவாதங்களின் போது கட்சித் தலைமையின் மனப்போக்கு எப்பொழுதும், "கட்சியின் நிலைபாடு கேள்விக்கே இடமில்லாத வகையில் மிகச்சரியாகத்தான் இருக்கிறது. இது அந்நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறும் தோழரின் குழப்பம் மட்டுமே. போக்கப்படவேண்டியது அக்குழப்பமே தவிர வேறுதுவுமில்லை"  என்பதாகவே இருந்தது. 

தலைமையின் இம்மனப்போக்கு, லெனினிச அணுகுமுறைக்கும் சிப்தாஸ் கோஷின் அணுகுமுறைக்கும் முற்றிலும் வேறுபட்டதாகும். ஏனெனில் கோரிக்கை எழுப்பப்பட்ட பின்னரும் கூட யதார்த்த உண்மை நிலைகள் பற்றிய புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில் எது சரியான நிலைப்பாடாக இருக்கும் என்பது குறித்து புதிதாக விவாதிக்க வேண்டியதன் அவசியத்தையே இது அங்கீகரிக்க மறுக்கின்றது. 

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கட்சியின் தற்போதைய தலைமை எப்பொழுதும் வங்க மொழி இதழான கனதாபியில் 1964 ம் ஆண்டு ஜூன் 16 ல் வெளியிடப்பட்ட " காஷ்மீர் பிரச்சனைகள் பற்றி " என்ற கட்டுரையையே குறிப்பிடுவது வழக்கம். அந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்த கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அக்கட்டுரை இருந்தது. அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் அக்கட்டுரை தோழர் சிப்தாஸ் கோஷின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் எழுதி வெளியிடப்பட்டதாகும். ஆனால் கேள்வியாதேனில், 1964 ம் ஆண்டு முதல் இத்தனை ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருகிறதா இல்லையா என்பதே ஆகும். 
இருப்பினும் அக்கட்டுரையில் கூட காஷ்மீர் பிரச்னையை கூர்க்காலாந்து அல்லது போட்டோலாந்து போன்ற பிரச்சனைகளுடன் ஒத்த பிரச்சனையாக காட்டும் எந்தவொரு முயற்சியையோ கண்டன வாசகங்களையோ அல்லது காஷ்மீர் மக்களின் போராட்டம் குறுகிய நோக்கமுடையது அல்லது பிரிவினைவாதச் செயல் என்று அப்போராட்டத்தை சிறுமைப்படுத்துவதையோ எங்குமே காண முடியாது. அதற்கு மாறாக அக்கட்டுரையில் தோழர்.சிப்தாஷ்கோஷ் " ஆனால் இப்பொழுது காஷ்மீர் பிரச்சனை எடுத்துள்ள வடிவத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது தொடர்பான சட்ட நுணுக்கங்கள் ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. அது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதா ? இல்லையா ? என்பதனை காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் தீர்மானிக்க இயலாது. மாறாக அது அரசியல் அணுகுமுறையின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்." என்று கூறுகின்றார். 

அதே கட்டுரையில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த கோட்பாடு காஷ்மீர் மக்களுக்கு சாதகமாக பொருந்துவது பற்றி விவாதிக்கும் இடங்களில் " நம் நாட்டைப் போன்ற பன்மொழி பேசுகின்ற பல தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தனக்கென சொந்த மொழி, கலாச்சாரம் மற்றும் குறிப்பிட்ட பாங்கினைனைக் கொண்ட குறிப்பிட்ட தேசிய இனம் ஓன்று பிற ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் குழு ( Ruling Clique ) வின் பொருளாதார , அரசியல் மற்றும் கலாச்சார சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் போது  அந்த ஒடுக்கப்படும், சுரண்டப்படும் தேசிய இனத்திற்கு தனது சுய நிர்ணய உரிமையினைக் கோரும் உரிமை உள்ளது. அக்கோரிக்கை அத்தேசிய இன மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிந்தது அது ஏகாதிபத்திய தூண்டுதலினால் உருவாக்கப்படாததாக இருக்கும் போது அக்கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டாமல் இருப்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியுமா? அக்கோரிக்கைக்கு ஆதரவு தர மறுப்பது ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தை ஆதரிப்பதற்கு ஒப்பானதாகாதா? காலனியாதிக்கச் சுரண்டல் வடிவத்தில் மட்டும் தான் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சி இருக்கிறதா? ஒரு தேசிய இனத்தின் ஆளும் குழு மற்றொரு தேசிய இனத்திற்கு பெயரளவிற்கு சம உரிமைகளை வழங்கிவிட்டு உண்மையில் அவ்வுரிமைகளை எவ்விதத்திலும் நடைமுறைப் படுத்தாமல் அனைத்து வடிவங்களிலும் அத்தேசிய இனத்தை சுரண்டுவதற்கும் நாம் அறிந்த காலனி ஆட்சிக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உண்டா ? " என்று தோழர்.சிப்தாஸ் கோஷ் வாதிக்கின்றார். மீண்டும் அவர் " எனவே கொள்கை அடிப்படையில் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டுமின்றி ஒடுக்கும் ஆளும் வட்டாரத்திற்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையினைக் கோரலாம். அத்தகைய கோரிக்கையும் ஆதரிக்கதக்கதே" என்று கூறுகின்றார். 

மேலும் அவர், " சுயநிர்ணயம் குறித்த கேள்வி பற்றிய இந்தப்பார்வையில் இருந்தே காஷ்மீர் பிரச்சனை நோக்கப்பட வேண்டும் " நமது கருத்தின் படி இந்திய ஆளும்குழு இதன் அடிப்படையிலையே காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்திய அரசியலமைப்புச்சட்டமும் அதற்கேற்றவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும். இப்பாதையில் நிர்வாக ரீதியிலான தடைகள் இருந்தால் அதுவும் நீக்கப்பட வேண்டும். இப்பாதையில் நிர்வாக ரீதியிலான தடைகள் இருந்தால் அதுவும் நீக்கப்பட வேண்டும் . ஆளும் வட்டாரம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தயாராக இல்லை எனில் காஷ்மீர் பிரச்சனை ஒரு சுதந்திரப் போராட்டமாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு பெரிதும் இருக்கவே செய்கிறது". என்று கூறினார்.
  காலத்தின் நீரோட்டத்தில் இன்று காஷ்மீரில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. அன்று தோழர். சிப்தாஷ் கோஷ் எது நிகழ வாய்ப்பு இருப்பதாக எதிர்நோக்கினாரோ அது இன்று உண்மையில் நிதர்சனமாகியுள்ளது. ஆனால் SUCI - ன் தற்போதைய தலைமை அங்கே காண்பது சுதந்திரப் போராட்டத்தை அல்ல, மாறாக அது அங்கு காண்பது நமது தேசிய வாழ்க்கையில் அருவருக்கத்தக்க புள்ளியாக இருக்கும் குறுகிய நோக்கமுடிய கண்டனத்திற்குரிய பிரிவினை வாத சக்திகளைத் தான். சிப்தாஸ் கோஷின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டு , காஷ்மீர் பிரச்சனை குறித்த சிப்தாஸ் கோஷின் புரிதலுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத அழுகி நாற்றமெடுத்த தன் சொந்தக் கருத்தை கட்சியின் நிலைபாடாக வெளிப்படுத்துவதற்கு இத்தலைமை எவ்வாறு துணிந்தது என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும். 

இத்தலைமை காஷ்மீர் பிரச்சனையை பஞ்சாபின் காலிஸ்தான் இயக்கத்துடனும் , மேற்கு வங்காளத்தின் கூர்க்காலாந்து, அஸ்ஸாமின் போடோலாந்து போன்ற  பிரச்சனைகளுடனும் ஒப்பிடுகிறது. மேலும் இவை அனைத்தையும் குறுகிய நோக்கமுடைய பிரிவினைவாத சக்திகளால் உருவாக்கப்பட்ட நமது தேசிய வாழ்க்கையின் அருவருக்கத்தக்க புள்ளிகள் என்று எவ்வித தயக்கமும் இன்றி கண்டனம் செய்கின்றது. இந்நிலையை அக்கட்சி எடுத்திருப்பது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை மனம் குளிரச் செய்வதற்காகக் கூட இருக்கலாம். 

இவற்றின் மூலம் SUCI -ன் தற்போதைய தலைமை காஷ்மீர் பிரச்சனை போன்ற விசயங்களில் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளில் இருந்து ஏற்கனவே விலகி வெகுதூரம் சென்றுவிட்டது என்பது தெளிவாகின்றது. சிப்தாஸ் கோஷின் சிந்தனைகள் பற்றிய புரிதலை மேலும் கூர்மையாக்குவதற்குப் பதிலாக இத்தலைமை இரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் தனது சொந்தக் கருத்துகளையும் வார்த்தைகளையும் புகுத்துவதன் மூலம் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளை கொச்சைப்படுத்தவும் திரித்துக் கூறவும் செய்கின்றது. அதன் மூலம் மார்க்சிசம் - லெனினிசத்தின் உட்கருவைப் பற்றிய இந்த மிக உயர்ந்த புரிதலை சூறையாடுகின்றது. SUCI -ன் தற்போதைய தலைமையின் காஷ்மீர் பற்றிய நிலைப்பாட்டிற்கு மாறாக, மேற்சொன்ன கட்டுரையில் தோழர்.சிப்தாஸ் கோஷ் விவாதித்த பாதையின் படிதான் காஸ்மீர் பிரச்சனை நோக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். காஷ்மீர் மக்களின் போராட்டம் ஆதரிக்க தக்க சுயநிர்ணய உரிமைக்காகன உண்மையான சுதந்திரப் போராட்டம் என்பதே நமது நிலைப்பாடாகும்.

நமது நாட்டைப் போன்று பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் வரலாற்று ரீதியாகப் பிறந்த சிக்கல் நிறைந்த தேசிய இனக் கேள்வியில் இருந்து உருவாகும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வரையறைக்குள் அடைப்பதும், அவை அனைத்தும் குறுகிய  நோக்கமுடையவை என்று ஒரே விதமான வார்த்தைகளில் வர்ணிப்பதுமான SUCI - ன் தற்போதைய தலைமையின் வழியில் இருந்து மாறுபட்டு நாம், காஷ்மீர் பற்றி மேற்சொன்ன விவாதத்தில் தோழர்.சிப்தாஸ் கோஷ் வழங்கிய கண்ணோட்டத்தின்படி பார்க்கும் போது ஜார்கண்ட் தனி மாநில கோரிக்கையினையும் உத்தரகண்ட் தனி மாநிலக் கோரிக்க்கையினையும் ஆதரிக்காமல் இருப்பதற்கு உறுதியான காரணம் எதுவும் உண்மையில் இருக்க முடியாது என்று கூறுகின்றோம். 

SUCI - கட்சியின் பொதுச் செயலாளருக்கு நவம்பர் மாதம் 1992 ல் எழுதிய கடிதத்தில் சங்கர் சிங் கோரியதற்கிணங்க ஜார்கண்ட் பிரச்சனையில் கட்சியின் நிலைப்பாட்டை விவாத்து முடிவு செய்வதற்காக SUCI - ன் மத்தியக் கமிட்டியின் முடிவின் படி   காட்ஷிலாவில் உள்ள சிப்தாஷ் கோஷ் நினைவு இல்லத்தில் பிஹார் மாநிலம் தழுவிய விருவுபடுத்தப்பட்ட அவைக்கூட்டம் ஓன்று நடத்தப்பட்டது . இந்த அவை மாநிலத்தின் அனைத்து மாவட்ட கமிட்டி மற்றும் மாவட்ட வெகுஜன அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் உள்ளடக்கியிருதது. அக்கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளரால் தலைமை தாங்கப்பட்டது. அவ்விவாதத்தில் ஜார்கண்ட் போராட்டத்தை நடத்தும் அமைப்புகள் மற்றும் அதன் தலைமையின் பல்வேறு பலவீனங்களை விமர்சனம் செய்தாலும் விவாதத்தில்  கலந்து கொண்ட 4 அல்லது 5 தோழர்களை தவிர பிற தோழர்கள் அனைவரும்  தங்களது உரையில் ஜார்கண்ட் தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் கூட்டத்தின் முடிவில் பேசிய பொதுச் செயலாளர், 'தொகுத்து வழங்குகின்றேன்' என்ற பெயரில் அறுதிப் பெரும்பான்மை தோழர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு அவரது சொந்தக் கருத்தை தொகுத்து வழங்கும் உரையாக வழங்கினார். அவர் அப்போதைய பிஹார் மாநிலப் பொறுப்பாளரையோ அல்லது பிஹார் மாநிலக் கமிட்டியையோ கலந்தலோசிகாமல், ஏன் மத்தியக் கமிட்டியில் எவ்வித விவாதமும் செய்யாமல் ஏற்கனவே Proletation Era  - வில் கட்சியின் நிலைபாடாக வெளியிடப்பட்டதைத்தான் அவ்வுரையில் விரிவாக விளக்க முயன்று கொண்டிருந்தார்.  

இருப்பினும் அவரது உரை இடையில் நிறுத்தப்பட்டு அவர் தொகுத்து வழங்கும் உரையை வழங்குவதாக இருந்தால் அவையில் அறுதிப் பெரும் பான்மையான தோழர்கள் தெரிவித்த கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தொகுத்து வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனில் விவாதத்தில் கலந்து கொண்ட மற்ற தோழர்களை போல் தனது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்திப் பேசலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். மீண்டும் தோழர் பொதுச் செயலாளர் அந்த தொகுத்து வழங்கும் உரை என்று அழைக்கப்பட்ட உரையை தொடங்கினார். அவர் தனது உரையில் ஜார்கண்ட் தனி மாநிலக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதன் மூலம் பழங்குடி இனமக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்று எவரேனும் தனக்கு உத்தரவாதம் அளித்தால் அப்போது அக்கோரிக்கையை தான் ஆதரிப்பதாக வாதம் செய்தார். அப்போது இது போன்றதொரு உத்தரவாதத்தை அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் உரிய தலைவரிடமோ , அல்லது அமைப்பிடமோ கேட்டாரா , கேட்டு உத்தரவாதம் கிடைத்த பின் தான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டாரா இது குதிரைக்கு முன் வண்டியை நிறுத்துவது போலாகாதா என்றெல்லாம் அவரிடம் கேட்கப்பட்டது. 

அதன் முன்னர் ஜார்கண்ட் பற்றிய விவாதம் முழுமை பெராமலையே அக்கூட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக இதே அவை விரைவில் மீண்டும் கூட்டப்படும் என்ற வாக்குறுதியுடன் கூட்டம் முடிந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் மத்தியக் கமிட்டி அவ்வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதன் பின்னர் நடைபெற்ற எக்கூட்டத்திலும் அதனை விவாதத்திற்குரிய பொருளாகக் கூட சேர்க்கவில்லை. 

பரந்த அளவிலான விவாதக் கூட்டங்களைக் கூட்டி அதன் மூலம் இத்தகைய தேசிய அளவிலான அல்லது மாநில அளவிலான பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூட மத்தியக்கமிட்டி உணரவில்லை என்பதே அத்தலைமையின் உண்மையான குணாம்சத்தை கேள்விகுறியாக்குகின்றது. மக்கள் மத்தியில் வலுவாக வேரூன்றி இருக்க வேண்டிய புரட்சிகரக் கட்சியால் இவ்வாறு நடந்து கொள்ள இயலுமா? இத்தலைமையின் புரட்சிகரமற்ற கேடுவிளைவிக்கத்தக்க போக்கின் விளைவாக கட்சியும் கட்சியின் வெகுஜன அமைப்புகளும் ஜார்கண்ட் பகுதில் பெரும் பாதிப்புக்குள்ளாகியின. தனது தொண்டர்களுக்கு சரியான தத்துவார்த்த ஆயுந்தங்களை வழங்காமல் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு எதிராக அவர்களை நிராயுதபாணிகளாக நிற்க வைக்கும் ஒரு கட்சியை பாட்டாளி - வர்க்கத்தின் புரட்சிகரக்கட்சி என்று கூற முடியுமா? 
உண்மையில் இப்பிரச்சனைகள் குறிகிய தன்மை கொண்ட, மாநிலங்களின் மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனைகள் தான் . சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சமயங்களில் பல்வேறு அடிப்படைகளில் அத்தகைய மறுசீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்போகும் ஒவ்வொரு புதிய மாநிலங்களின் வடிவம் மற்றும் அமைப்புகள் குறித்தும் அதன் செயல்பா ட்டு அதிகார வரம்பு போன்றவை தொடர்பாகவும் பலவகைகளில் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமான காஷ்மீர் பிரச்னையுடன் இப்பிரச்சனைகளை எவ்வாறு பொறுத்த இயலும்? இவ்வாறு முற்றிலும் வேறுபட்ட வகையான பிரச்சனைகளை ஒரே வரையறைக்குள் அடைப்பதன் மூலம் சிக்கல் நிறைந்த யதார்த்தக் கூறுகளை தன்னால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதையும் தொழிலாளி வர்க்கத்திற்கு சரியாக முனைப்புடன் வழிகாட்டும் தலைமைக்குரிய தகுதி தனக்கு இல்லை என்பதையுமே SUCI -ன் தலைமை நிரூபித்துள்ளது.
கட்சியின் மொழிக் கொள்கையுடனும் கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ( இங்கு மொழிக் கொள்கை எனக் குறிப்பிடப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை வேலைகளுக்கான மொழிக் கொள்கையே தவிர இந்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை அல்ல. அதாவது தேசிய மொழி அல்லது அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக இந்திய அரசாங்கங்கள் கூறிவருவதை அங்கிகரிப்பதல்ல . மாறாக ஒரு புரட்சிகரக் கட்சி பரந்த அளவில் உழைக்கும் மக்களுக்கு புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்ல எந்த மொழி உழைக்கும் வர்க்கத்தில் அதிகபட்ச மக்களால் பேசப்படுகிறதோ அந்த மொழிக்கு அதற்குரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகும்.கட்சியின் பிரசுரங்களை வெளியிடுவதில் இந்தியை பல்வேறு பிராந்திய மொழிகளைப் போன்று ஒரு மொழி என்ற அடிப்படையில் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே அக்கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. )  தேசிய   அளவிலான ஒரே மொழியாக ஆங்கிலத்தையும் ஹிந்தி உட்பட பிற மொழிகள் அனைத்தையும் பிராந்திய மொழிகளாகவும் ஏற்றுக் கொண்ட   இருமொழிக் கொள்கையானது யதார்த்த உண்மைகளுடன் ஒத்துப்போவதாகவும் இல்லை; கட்சியின் முன்னுள்ள கடமைகளுக்குப் பொருத்தமானதாகவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இருமொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவ்விரு மொழிக் கொள்கைக்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை ஒன்றினை ஏற்றுக்கொள்ளும் வகையில் சூழ்நிலை பெருமளவு மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. நம்மை போன்ற பன்மொழி பேசுகின்ற ஒரு நாட்டில் தனது மொழிக் கொள்கையை தீர்மானிக்கும் புரட்சிகரமான கட்சி ஒரு மொழியின் இலக்கிய வளத்திற்கு எப்பொழுதுமே தீர்மானகரமான முக்கியத்துவத்தை வழங்கக்கூடாது. நடைமுறை ரீதியில் நோக்கும் போது  மற்ற விசயங்கள் அனைத்தைக் காட்டிலும் அக்காலத்தில் மக்கள் மத்தியில் - குறிப்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் - அவர்களது தொடர்பு மொழியாக உள்ள ஒரு மொழியின் பரந்துபட்ட பயன்பாடே அதிகப்பட்ச முன்னுரிமையைப் பெற வேண்டும். 

உலக சோஷலிச முகாம் வீழ்ச்சியடைந்த பின்னர் - முன்னாள் காலனி மற்றும் அரைக்காலனி நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்று அந்நாடுகள் அனைத்திலும் சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசிய முதலாளித்துவ அரசுகள் நிறுவப்பட்ட பின்னர் - GATT மூலமாகவும் தற்போது WTO மற்றும் அதுபோன்ற பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளால் உலக   சந்தைப் பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்ட பின்னர் - ஏற்பட்ட மாறுபட்ட உலக சூழ்நிலைகளை ஆராய்வதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் SUCI - ன் தற்போதைய தலைமை வருந்தத்தக்க விதத்தில் தவறிவிட்டது. கட்சித் தலைமையின் இத்தவறு அது ஏகாதிபத்தியத்திற் கெதிரான முழுமையானதொரு போராட்டத்திற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ' சிறப்புத் தொண்டர் படை ' ஒன்றை அமைப்பதன் மூலம் அப்போராட்டத்தை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வளர்த்தெடுப்பதற்கும் அறைகூவல் விடுத்ததன் மூலம் வெளிப்பட்டது . இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏற்கனவே ஏகாதிபத்தியத் தன்மையை அடைந்து விட்டதால் இங்கே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தினுள்ளே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் உட்பொதிந்துள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று கட்சித்தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பதலிருந்தும் கட்சித்தலைமையின் இத்தவறு வெளிப்பட்டுள்ளது. ( 1995 டிசம்பர் 24  முதல் 31  வரை காட்ஷிலா சிப்தாஸ் கோஷ் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற விரிவாக்கப்பட்ட அவைக் கூட்டத்தில் சில தலைவர்கள் பேசிய - கட்சித்தலைமையால் மருத்துரைக்கப்படாத  - ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்ட உரை. அக்கூட்டத்தில் , கட்சியின் மிக உயர்ந்த தலைவரான தோழர். நிஹார் முகர்ஜி தனது தொகுத்து வழங்கும் உரையில் " இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தோழர்கள் இதனை தங்களது டைரியில் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும் . ஏகாதிபத்தியத்தின் மூன்றாம் உலகப் போர் வரப்போகின்றது. அப்போரே மனித குல வரலாற்றில் கடைசிப் போராக இருக்கும்." ஏனெனில் ( அதே உரையில் பின்னர் அவர் விவரித்தது போல்) " அம்மூன்றம் உலகப்போர் சர்வதேச அளவில் தீர்மானகரமான வர்க்கப் போராக ( Decisive class war  ) மாறிவிடும் " என்று வலியுறுத்தியதில் அத்தவறு வெளிப்படையாகவும் எடுத்துக்காட்டப்பட்டுவிட்டது.  

தோழர்.நிஹார் முகர்ஜியின் இப்பகட்டனா ஆர்ப்பரிக்கும் வெற்றுச் சொற்கள், SUCI - ன் முதல் ஆய்வறிக்கை ( Thesis ) யில் இதே வார்த்தைகளில் கூறப்பட்ட , வரலாற்றுப்பூர்வமாக தவறானது என்று நிரூபிக்கப்பட்ட பழைய கருத்தின் எதிரொலியே என்பது அந்த அவையில் இருந்த பழைய தோழர்களைத் தவிர அனேகமாக எவருக்கும் தெரிந்திருக்காது. 1948 ம் ஆண்டு C.C.S.U.C - யினால் வெளியிடப்பட்ட "சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள்" என்ற ஆய்வறிக்கையில் "இந்த அணு ஆயுத யுகத்தில் மூன்றாம் உலகப் போரின் வடிவத்தில் சர்வதேச அளவில் நடக்கப்போகும் தீர்மானகரமான வர்க்கப்போரின் போது....."  என்று குறிப்பிடப்பட்டது.  ஆனால் பின்னர், தோழர்.ஸ்டாலின் அவர்களின் " USSR - ல் சோசலிசத்தின் பொருளாதார பிரச்சனைகள்" என்னும் நூலில் வழங்கப்பட்ட சரியான புரிதலின் அடிப்படையில் இத்தவறு தோழர்.சிப்தாஷ் கோஷ் அவர்களால் திருத்தப்பட்டது. இருந்த போதிலும் , அதே பழைய கருத்தையே தற்போதைய தலைமையின் பொதுச் செயலாளர் ஏறத்தாழ அதே விரிவாக்கப்பட்ட அவையில் ( 1995 - டிசம்பர் 24 முதல் 31 வரை) கூடியிருந்த தோழர்கள் அனைவரும் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்வதும், கட்சியின் தற்போதைய தலைமை தோழர்.சிப்தாஷ் கோஷ் அவர்களது திருத்தத்தை எள்ளளவும் கணக்கில் கொள்ளாமல் 1948-ல் உருவாக்கப்பட்ட அத்தவறான கருத்தையே இன்றும் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது என்பதையே நிரூபிக்கின்றது. தோழர்.சிப்தாஷ் கோஷ் காட்டிய பாதையில் இருந்து இத்தலைமை எவ்வாறு விலகிச் சென்றுள்ளது என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டாகும். 

காட்ஷிலாவின் விரிவாக்கப்பட்ட அவைக்கூட்டத்தில் பேசிய அதே உரையில், ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் போது மாசேதுங் எவாறு ஷியாங் கேஷேக்குடன் இணைந்து ஐக்கிய முன்னணியில் முதன்மையாக செயல்பட்டார் என்பது பற்றி பொதுச் செயலாளர் நிகழ்த்திய நீண்ட விவாதமே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையில் இருந்து தற்போதைய தலைமை விலகிச் சென்று விட்டது என்பதை இன்னும் சந்தேகத்திற்கிடமின்றி புலப்படுத்துகின்றது. 

கட்சியின் தற்போதைய தலைமை முதல் உலகப்போர் நிகழ்ந்த நாட்கள் முதல் ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் ஏகாதிபத்தியப் போரைப் பற்றியுமான புரிதல்களை துளியளவேனும் மேம்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. சந்தைகளுக்கான ஏகாதிபத்தியப் போர் என்பது " ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் " என்று அப்போது வரையறுக்கப் பட்டது. இரண்டாம் உலகப்போரைப் பற்றியும் இதே வார்த்தைகளில் இவ்வரையரையே கூறப்பட்டது. அப்போது ஏதேனும் ஒரு ஏகாதிபத்திய அதிகாரத்தின் கையில் உலக அளவிலான காலணிகளும் அறைகாலனிகளும் இருந்தன. அக்காலணி நாடுகளை ஒன்றிடமிருந்து மற்றொன்று பறித்துக் கொள்வதற்கான முயற்சியாக ஏகாதிபத்தியப் போர் தொடுக்கப்பட்டது. எனவே " ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் " என்ற அவ்வரையறை மிகச் சரியான வெளிப்பாடாக இருந்தது.  

ஆனால் தற்போதைய உலகச் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். இன்று ஒரு குறிப்பிட்ட எகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட சந்தையாக எந்தவொரு  காலனி நாடோ அரைக்காலனி நாடோ இருக்கவில்லை. ஒப்பிட்டளவில் பின்தங்கிய ஒவ்வொரு நாடும், வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் ஒன்றுபோல் சுரண்டுவதற்கு திறந்து விடப்பட்ட உலகச் சந்தைப் போருளுளாதாரத்தின் பங்கும் பகுதியுமாகவே இருக்கின்றது. உலகமயமாக்கல் என்று அழைக்கப்படும் இத்தகைய சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில் அதே வார்த்தைகளினாலான வரையறை அதே பொருளைத் தருமா அல்லது அதற்கு எந்தப் பொருளும் இல்லையா ? ஆனால் இக்கேள்வியின் முன் SUCI கட்சியின் தற்போதைய தலைமை செயலற்று நிற்கின்றது. அது ஏகாதிபத்தியப் போரை வரையறுப்பதற்கு ஒரே விதமான சொற்களை மட்டுமே கற்றுக் கொண்டுள்ளது. கட்டாக் மாநாட்டில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஆய்வறிக்கையில் கட்சியின் தலைமை உடனடியாக நிகழக் கூடியதாக எதிர்நோக்கிய போர் அபாயத்தை " ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போர் " என்றே குனாதிசயப்படுத்தியது. சோஷலிச முகாம் இனிமேல் இல்லாமல் போகும் என்றோ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்திய நாட்டின் குடியாட்சியின் கீழோ அல்லது மேலாதிக்கத்தின் கீழோ இருக்கக்கூடிய காலனி அல்லது அரைக்காலனி நாடுகள் எதுவும் இல்லாமல் போகும் என்றோ ஏகாதிபத்திய முதலாளித்துவ வாதிகள் உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தை கொண்டு வருவார்கள் என்றோ இத்தகைய எதிர்நோக்கப்படாத வளர்ச்சிப் போக்குகள் நிகழும் என்றோ யார் அறிவார்? இதன் விளைவாகவே இந்த யதார்த்த சூழ்நிலையை யதார்த்தமாக அறிவதில்  SUCI கட்சியின் தற்போதைய தலைமைக்கு மிகப்பெரும் சிக்கல் உருவானது. 

எனவே சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை முடிந்த அளவு அங்கீகரிக்க மறுக்கின்ற சிறந்ததொரு வழியை SUCI - ன் தற்போதைய தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. 24 பர்கானக்கள் (மே.வங்காளம் ) மாவட்டத்தில் உள்ள சந்தோஷ்பூரில் நடைபெற்ற மத்தியக் கமிட்டிக் கூட்டத்தின் முன்னர் சங்கர் சிங் சமர்ப்பித்த முதல் நகல் ஆய்வறிக்கையில் அவர், சோஷலிச முகாமின் வீழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது " சோஷலிச முகாம் இன்று இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பொதுச் செயலாளர் உட்பட மற்ற அனைத்து மத்திய கமிட்டி உறுப்பினர்களும் அதனை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை. தொடர்ச்சியான எட்டு மத்தியக் கமிட்டிக் கூட்டங்களில் சங்கர் சிங்கைத் தவிர அனைத்து மத்திய கமிட்டி உறுப்பினர்களும் பொதுச் செயலாளருடன் சேர்ந்து ஒரே குரலில் " சோஷலிச முகாம் இன்று இல்லை " என்பதை ஒப்புக் கொள்வதற்கு உறுதியாக மறுத்து வந்தனர். இருந்த போதிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சி மாநாட்டை நடத்த வேண்டிய அவசரத்தினாலும் உந்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வந்த போது, மத்தியக் கமிட்டி வேறு வழியின்றி கீழ்கண்ட வார்த்தைகளில் அதனை ஏற்றுக் கொண்டது: " சோசலிஸ முகாம் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் இன்று சோஷலிச முகாம் இல்லை" ( இவையே 1994 ம் ஆண்டு கட்டாக் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் காணப்படும் அவ்வார்த்தைகளாகும்). 
மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஆய்வறிக்கை பல்வேறு தேசிய -சர்வதேசிய பிரச்சனைகள் குறித்து மார்க்சிசம் - லெனினிசம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு தற்போதைய தலைமை தவறியதன் விளைவாகவும் பற்றிய புரிதல் மேம்படுத்துவதற்கு தற்போதைய தலைமை தவறியதன் விளைவாகவும்  நெடுங்காலம் முதலாகவே கட்சியில் நடைபெற்று வரும் சம்பரதாய ரீதியிலானதும் இயந்திர கதியிலானதுமான நடைமுறைகளின் விளைவாகவும் ஏற்பட்ட வெளிப்படையான சமரசத் தன்மை வாய்ந்த ஆய்வறிக்கையாக இருந்த போதிலும் மாநாட்டின் போதோ மாநாட்டிற்குப் பின்னரோ இவறிக்கை குறித்து எவரும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்க வில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விசயமாகும்.

 மாநாட்டின் இது குறித்து சங்கர் சிங்கின் பங்கென்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலைத் தேடுவதற்குப் பதிலாக சங்கர் சிங்-ம் அரசியல் தலைமைக்குழு என்று சொல்லப்படும் குழுவின் பிற உறுப்பினர்களும் மாநாட்டு மேடையில் இருந்தும் மாநாட்டின் அனைத்து அலுவல்களில் இருந்தும் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பதை விளக்குமாறு கட்சியின் தலைமையை அதிலும் குறிப்பாக கட்சியின் உயர்மட்டத் தலைவரைக் கேட்பதே பொருத்தமானதாக இருக்கும். 

முன்னாள் காலனி மற்றும் அரைக்காலனி நாடுகள் அனைத்தும் சுதந்திரம் அடைந்தததைப் பொறுத்தவரை , கட்சியின் தலைமை ஐ.நா. சபை ஆவணங்களின்படி இன்றும் பல பண்ணிரண்டுகள் கணக்கில் காலனிகள் இருக்கின்றன என்பதை நிரூபிப்பதற்கு ஐ.நா. மற்றும் CPI (M ) கட்சி வெளியிட்ட ஆவணங்களின்  உதவியுடன் உண்மையிலையே ஒரு ஆராய்ச்சியையே நடத்தியது.

மூன்றாவது இனமான போரு ளா தா ரத்தின் உலகமயமாக்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைமை, " உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் தன்மையை மாற்றிவிட்டது என்று நினைப்பவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள்.."  என்ற வார்த்தைகளால் மட்டும் மறுத்து வாதிடுகின்றது. 

இப்பிரச்சனைகள் குறித்து சிப்தாஷ் கோஷ் என்ன சொல்கிறார் என்பதை நாம் பார்ப்போம். அவர், " இவைகள் பற்றி (…. தோழர் சிப்தாஸ் கோஷ் முன்னதாக சில பிரச்சனைகளை  உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார் ) மார்க்சிசத்தை விரிவுபடுத்தியும், வளர்த்தெடுத்தும் செழுமைப் படுத்தியும் லெனின் வழ ங்கியவைகள் இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. ஆனால் அவை ஒவ்வொன்றைக் குறித்தும் வழங்கப்பட்ட புரிதலும் அதனை வெளிப்படுத்தும் முறையும் முன்னைப் போலவே இன்றும் ஒரே மாதிரியாக இருக்குமானால் அது தவறானதாகவும் தீங்கிழைப்பதாகவும் இருக்கும். அதே பழைய சொற்றொடர் இன்றும் சொல்லப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன ? இதன் பொருள் கொள்கை பற்றிய பழைய புரிதலே (realisation ) இன்றும் தொடர்ந்து நீடிக்கின்றது என்பதே ஆகும். அப்பழைய புரிதல் தொடர்ந்து நீடித்தால் அப்பழைய புரிதல் நீடிக்கும் நாட்கள் அனைத்திலும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது தோன்றும் எண்ணற்ற முரண்பாடுகளைத் தீர்க்க இயலாமல் போகும் ". 

தோழர். சிப்தாஸ் கோஷ் கூறியவற்றின் துணை கொண்டு பார்க்கும் போது எகாதிபத்தியப்போரைப் பற்றி கட்சித்தலைமையின் புரிதலும் அதனை அது வெளிப்படுத்துகின்ற சொற்றொடரும் கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மறுக்க இயலாத மாற்றங்களின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு அது முழுவதுமாகத் தவறிவிட்டது என்பதையே நி ரூ பிக்கின்றது. இன்று சிறிய அல்லது பெரிய, பின்தங்கிய அல்லது முன்னேற்றிய ஒவ்வொரு நாடும் சுதந்திரமான, தனக்கென ஓர் இறையான்மை கொண்ட தேசிய முதலாளித்துவ அரசை உடையதாக இருக்கின்றன. எனவே புரட்சி பற்றிய முதன்மைக் கேள்வியான அரசு அதிகாரம் பற்றிய கேள்வியைப் பொறுத்தவரை, அனைத்து நாடுகளுமே ஏற்கனவே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான கட்டத்திலையே உள்ளன. இத்தைகைய சூழ்நிலையில் சமூக அவலங்கள் அனைத்திற்குமான மூலகாரணத்தை ஏகாதிபத்தியத்தில் காண்பதும் - காட்டுவதும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழுமூச்சான போராட்டத்தைப் பற்றி பேசுவதும் அதனையே பெரிதுபடுத்திக் காட்டுவதும் உண்மையில் புரட்சியின் தாக்குதல் இலக்கிலிருந்து பெரிய முதலாளிகளை பாதுகாக்கும் முயற்சியே ஆகும். மேலும் அது நிச்சயமாக முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக்கான பாதையில் இருந்து விலகிச் செல்வதாகும். 

சம்பந்தப்பட்ட ஆவணங்களில் உள்ள வாசகங்களில் வெளிப்படையான விலகல் எதுவும் இல்லை என்றால் அங்கே  எப்படி பாதை விலகல் இருக்க முடியும் ? என்று கூட சில தலைவர்கள் வாதிடலாம். சம்பந்தப்பட்ட நபர்கள், தாங்கள் என்ன கூறினார்களோ, அதையே மிகச்சரியாக அதை மட்டுமே - நடைமுறையில் செயல்படுத்துகின்ற , எத்தகைய சூழ்நிலைகளிலும் சரியாகச் சொல்லுமிடத்து தாங்கள் சாவதாக இருந்தாலும் தங்களது கொள்கையில் எவ்வித முரண்பாடும் ஏற்பட அனுமதிக்காத நேர்மை மிக்க மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய வாதத்தில் சிறிதளவு முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் அந்தோ! இந்தக் கட்சியில் மட்டுமல்ல, சர்வதேச கம்யூனிச இயக்கம் முழுவதிலும் இன்று அத்தகைய தன்மை ( Phenomenon ) யைக் காண்பது அரிதாகும். மாறாக, அறிவிக்கப்பட்ட கொள்கை நிலையில் இருந்து உண்மையில் வெகுதூரம் - ஏன் எதிர்ப்புரட்சி வாதிகளாக மாறும் அளவிற்கு -வெகுதூரம் விலகிச் சென்றவர்களே அவர்கள் அவ்வாறு விலகிச் செல்வதற்கு முன் இருந்த அதே கொள்கை நிலையை எவ்வாறு தங்களின் ஆவணங்களில் தொடர்ந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு கம்யூனிச இயக்கத்திலிருந்தே ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும். இங்கு அவர்கள் அதனைத் தெரிந்து செய்தார்களா? தெரியாமல் செய்தார்களா? என்பதல்ல கேள்வி. அவர்கள் அவ்வாறுஇருந்தார்களா  இல்லையா என்பது தான் முக்கியம்.

" தத்துவார்த்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விசயங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இரகசியமாகக் கூட்டங்கள் நடத்துவது சாதாரணத் தோழர்கள் , பாட்டாளி வர்க்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவற்றில் பங்கெடுப்பதையும் அதன் மூலம் அவர்கள் அறிவு வளர்ச்சி பெறுவதையும் தடை செய்வதாகும். மேலும் அத்தகைய தனிமறைவான கூட்டங்கள், கம்யூனிசத்திற்கோ , கம்யூனிசக் கல்விக்கோ எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத சாதிவாத நடவடிக்கைகளின் அடையாளத்தையும் உடன் கொண்டிருக்கும்.  மாறாக , திறந்த அரசியல் விவாதங்கள் தத்துவார்த்த கருத்து வேறுபாடுகளை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவற்றை தீர்ப்பதற்கு உதவி புரியும். அது தவிர இது மக்கள் மனதில் அவ நம்பிக்கை ஏற்படுவதற்கும் கருத்துகளை தவறாகப் புரிந்து கொள்வதற்கும் உள்ள வாய்ப்பெல்லையை குறைத்துவிடும். மேலும் இது எதிர்த்தரப்பினரின் கருத்துகளை திரித்துக் கூறுவதற்கும் வெளியில் தங்களது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது தங்களது இருப்பையும் நிலைபாட்டையும் தொடர்ந்து மாற்றிக் கொள்வதற்கும் உள்ள வாய்ப்பையும் கூட குறைத்து விடும். தனி மறைவான கூட்டங்களில் இத்தகைய கூறுகள் இருப்பதற்கான வாய்ப்பெல்லை அதிகமாக உள்ளது " என்று தோழர் சிப்தாஸ் கோஷ் நமக்கு போதித்துள்ளார். ( கனதாபி , வங்க மொழி இதழ் 1976 ஆண்டு ஏப்ரல் 24 வெளியீடு ) 

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியில் கட்சி முழுமையும் மத்தியக் கமிட்டிக்கு கீழ்படிதல் என்பது குருட்டுத்தனம் அல்லது தவறான கருத்துகளின் அடிப்படையிலானதாக இல்லாமல் அறிவு பூர்வமானதாக அல்லது சரியான புரிதல் மற்றும் சரியான மதிப்பீட்டின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா? 

எனவே, அத்தகைய சூழ்நிலையில் கருத்து வேறுபாடுகள் களையப் படுவதை நோக்கிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடும் வகையில் பல தலைவர்கள மத்தியக்கமிட்டிக் கூட்டங்களில் நடந்து கொண்ட விதத்தினை மத்தியக்கமிட்டிக்கு வெளியே , குறைந்த பட்சம் கட்சியின் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அதனைத் தடுப்பது அறிவு பூர்வமானதாகவும் சரியானதாகவும் இருக்குமா ? அது தோழர்.சிப்தாஸ் கோஷால் எப்பொழுதும் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவகையான விதிமுறைவாதம் ( Code mongering ) ஆகாதா ? கட்சிக் கட்டுப்பாட்டின் பொருட்டு மத்தியக் கமிட்டியில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மத்தியக் கமிட்டிக்கு வெளியில் உள்ள எவரும் அறிந்து கொள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறை வேண்டும்போது ; மத்தியக் கமிட்டியின் நேரம் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி கட்சி முழுவதும் அல்லது குறைந்த பட்சம் கட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத் தோழர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்று புரட்சியின் கடமை  வேண்டும் எனில் , இவ்விரண்டில் எது முன்னுரிமை பெறத்தக்கது ? சந்தேகமே இல்லாமல், கட்சி குறித்த கேள்வியைக் காட்டிலும் புரட்சி குறித்த கேள்வியே மிகவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாவது தான் முன்னிரிமை பெறத்தக்கது ஆகும். இருந்தபோதிலும், அத்தகைய சிந்தனைப்போக்கு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நுழைவதற்கும் நடைமுறைப்படுத்தப் படுவதற்கும் உள்ள அனைத்து வழிகளையும் SUCI - கட்சியின் தற்போதைய தலைமை அடைத்து விட்டது. ஏதேனும் ஒரு தோழர் மத்தியக் கமிட்டி சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றைப் பற்றி கேள்வி எழுப்பும் போது அல்லது அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏதேனும் கேட்கும் போது நடத்தை நேரிமுறையைக் காரணம் காட்டி அத்தோழருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்க மறுப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இது நடத்தை நெறிமுறைகள் என்பது ஏதோ முழுமையான காலம், இடம், நோக்கம் போன்ற நிபந்தனைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் அப்பாற்ப்பட்டு செயல் படத்தக்க ஓன்று என்பது போன்ற தவறான அர்த்தத்தை தருகிறது. இருந்தும் SUCI கட்சியில் கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறை பற்றிய தற்போதைய தலைவர்களின் கருத்தும் புரிதலும் உண்மையில் அது போன்றே உள்ளது. அவ்வாறில்லையெனில் , மத்திய கமிட்டி வெளியிட்ட புத்தகம் அல்லது அறிக்கை ஆவணத்தை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாகவும் ,பயனுள்ளதாகவும் ஆக்கும் வகையில் அதிலுள்ள தவறுகளை சரிசெய்வதற்காகவும் செம்மைப்படுத்துவதற்காகவும் அதிலுள்ள முக்கியமான தவறுகள் அல்லது போதாமைகளைச் சுட்டிக்காட்ட முயலும்போது, மத்தியக் கமிட்டியின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் விரிவாக்கப்பட்ட மத்தியக் கமிட்டிக் கூட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட தோழர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரும் எந்தத் தவறுகள் அல்லது போதாமைகள் பற்றி சுட்டிக்காட்ட விரும்புகின்றனர் என்று அறிந்து கொள்வதற்குக் கூட எள்ளளவும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் உறுதியான குரலில் தங்களது திறமைக்கேற்ப ( லெனின் ,ஸ்டாலின் , சிப்தாஸ் கோஷ் ஆகியோரைக் கூட மேற்கோள் காட்டி ) எந்தவொரு ஆவணமும் மத்தியக்கமிட்டியால் வெளியிடப்பட்ட பின்னர் மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் அந்த ஆவணத்தில் ஏதேனும் தவறு அல்லது போதாமையை முற்றிலும் விரோதமானதாகும் என்பதை அறிவுறுத்தவே முயல்கின்றனர். 1995, ஜூன் 4 முதல் 8 வரை கல்கத்தா, ஆஸ்வால் பவனில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான விருவுபடுத்தப்பட்ட மத்திய கமிட்டி கூட்டமே ( அதில் பதிவு செய்யப்பட்ட தோழர்களின் உரை தற்போதைய தலைமையால் அழிக்கப்படாமல் இருந்தால் ) இதற்கு சான்று கூறும். 

இங்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமான ஜனநாயக மத்தியத்துவம் பற்றிய கோட்பாடுகளின் செயல்பாடுகள் பற்றியும் கொஞ்சம் கூறுவது நலமாக இருக்கும். தலைவர்கள் தங்களது உரையிலும் பேச்சிலும் தத்துவார்த்தம் ( ideological Struggle ) போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் நடைமுறையிலோ எதிர்கருத்துக்கள் எதனையும் கேட்டுச் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. தத்துவார்த்த போராட்டம் விமர்சனம் மற்றும் சுய விமர்சனம் ஆரோக்கியமானதாக இருப்பதற்கு மாற்றுக் கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் சகிப்புத்தன்மையுடன் கேட்பதற்குரிய தத்துவார்த்த சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.ஆனால் இக்கட்சியில் அனைத்து மட்டங்களிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கேட்பதற்கான சகிப்புத்தன்மை துளியும் கிடையாது என்ற சூழ்நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சனக்குரல் ஒவ்வொன்றும் கட்சியின் மீது பற்றின்மை ( Lack of allegience) என்றே கருதப்பட்டது. மேலிருந்து வந்த வழிகாட்டுதல்களை திறனாய்விற்கு  உட்படுத்தாமல் பின்பற்றுவதும் அவற்றை குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்வதும் கட்சியின் மீதான பற்றாக பாராட்டப்பட்டது.  அத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்கு கட்டாக்கில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தோழர் V.N.சிங் பேசும்போது மாநாட்டின் பெரும் பகுதியினரால் வெளிப்படுத்தப்பட்டது. 1995 ம் ஆண்டு டிசம்பர் 24  முதல் 31 வரை காட்ஷிலாவில் நடைபெற்ற விரிவாக்கப்பட்ட அவைக் கூட்டத்தில் மத்தியக் கமிட்டியின் அப்போதைய உறுப்பினர் தோழர். சங்கர் சிங் பேசும் போது மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட அவையின் பெரும்பகுதியினர் அத்தகைய சகிப்புத் தன்மையற்ற போக்கினை மிக மோசமான வடிவில் வெளிப்படுத்தினர். பொதுச்செயலாளர் தோழர் நிஹார் முகர்ஜியுடன்  சங்கர் சிங் திறந்த மனத்துடன் பெருங்குரலில் வாதம் செய்வதை கேட்டுக் கொண்டிருந்த மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர். தபாஸ் தத்தா , " பொதுச் செயலாளர் மீது சங்கர் சிங்கிற்கு ஏதேனும் மரியாதை உள்ளதா , இல்லையா " என்பது பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் சம்பிரதாய ரீதியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.  ஆனால், அதன் மீது மத்தியக் கமிட்டி விவாதிக்கும் போது அவர் சகிப்புத்தன்மையையோ, கட்சியில் திறந்த மனதுடனான விமர்சனங்களை வரவேற்கும் போக்கையோ வெளிப்படுத்தினாரா ? என்றால் இல்லை. அவர் இதற்கு முற்றிலும் எதிரான - கட்சியில் விமர்சனம் மற்றும் சுதந்திரமானா , வெளிப்படையான விவாதம் ஆகியவற்றுடன் மரியாதை குறித்த கேள்வியை இணைக்கும் - போக்கையே வெளிப்படுத்தினார். இருந்த போதிலும் தோழர். தபாஸ் தாத்தாவின் குற்றச்சாட்டை பொதுச் செயலாளர் நிராகரித்து விட்டார். அத்துடன் அவர் எழுப்பிய கேள்வி பற்றிய விவாதம் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரிஸா மாநில SUCI - ன் பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஒருவரால் தலைவருக்கு மரியாதை செலுத்துதல் அல்லது அவமரியாதை செய்தல் குறித்த கேள்வியுடன் விமர்சனம் மற்றும் வாதம் செய்வதை இணைத்துப் பார்க்க முடிந்தது எதனால் என்பது குறித்து இன்னும் இந்த அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று எவரும் உணரவில்லை. மேலும் அவர்கள் தான் SUCI கட்சியில் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் திருத்துதல் மற்றும் உயர்த்துதலுக்கான போராட்டம் ( Rectification and Elevation Struggle ) என்றழைக்கப்படும் பணியை நிறைவேற்றும் பொறுப்புடையவர்களாகக் கருதப்படும் தோழர்களாவர். தங்களுக்கே அத்தகைய முழுதளவிலான திருத்துதல் தேவைப்படக்கூடிய இத்தகைய தலைவர்களைச் சார்ந்திருக்கும் அப்போராட்டத்தால் எவ்வளவு தூரம் கட்சியில் திருத்துதலோ, உயர்த்துதலோ செய்ய இயலும் என்பதை ஒருவர் நன்கு கற்பனை செய்து பார்க்கலாம். தோழர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் ஏற்படும்போது இத்தலைவர்கள் யதார்த்தமான பிரச்னையை யதார்த்தமாக கையாளுகின்றேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தோழர் அல்லது தோழர்கள் பக்கம் சார்ந்து விடுகின்றனர். இதன்மூலம் கட்சிக்குள் குழுவாதத்தை ஊக்குவிக்கின்றனர். தலைவர்கள், அவர்களுக்குப் பிடித்த தோழர்களை அவர்களுக்குப் பிடிக்காத தோழர்களுக்கு எதிராகவும் , சில நல்ல தோழர்களைக்கூட முன்னணித் தோழர்களின் செயல்பாட்டை கண்காணித்து தகவல் தருமாறும் நியமிக்கின்றனர். இதன் மூலம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலக்கமும் அச்சமும் அவநம்பிக்கையும் கலந்ததொரு சூழலை உருவாக்குகின்றனர்.  அத்துடன் கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி வாழ்க்கை முறையில் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்ற லெனினிசக் கோட்பாட்டிற்கு விரோதமாக கட்டுப்பாடு என்ற பெயரில் கட்சியில் சந்தடியற்ற இரகசியப் பேச்சுக் கொள்கையினையும் கட்சிக்குள் தீவிரமாக தனிப்பிரிவுகளை உருவாக்குவதையும்  நடைமுறைப்படுத்துகின்றது. 

இத்தகைய கூறுகள் குட்டி முதலாளித்துவ சாதிவாதக் காட்சிகளில் பொதுவானவையாக இருந்தாலும் லெனினிச முன் மாதிரி பாட்டாளி வர்க்க புரட்சிகரக் கட்சிக்கு முற்றிலும் அந்நியமான கூறுகளாகும். 

போர்க்குணம் மிக்க எதிர்ப்பு போராட்டத்திற்கான சர்வதேசப் பொதுமேடை ஒன்றை கட்டியமைப்பதற்கு SUCI -ன் தற்போதைய தலைமை எடுத்த முன் முயற்சிகளையும் வழங்கிய முக்கியத்துவத்தையும் ஆதரித்து வாதிடும் போது சில தோழர்கள் குறிப்பாக சில மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், அவ்வாறு செய்வதன் மூலம் கட்சி தனது பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை பிரதிபலிக்கவும் அக்கடமையை நிறைவேற்றவும் செய்கின்றது என்று அழுத்தம் திருத்தமாக கூறும் நிலைக்கு சென்று விட்டனர். உண்மையில் இது ஓர் விந்தனையான எண்ணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை நிறைவேற்றுவதற்கு இது தான் சரியான வழியா? இன்று சோவியத் யூனியனும் உலக சோஷலிச முகாமும் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்திய பாட்டாளி வர்க்கமும் அதே போன்று பிற நாடுகளின் பாட்டாளி வர்க்கங்களும் முதலில் உலகத் தொழிலாளர்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தங்களது நாடுகளில் புரட்சியை நிறைவேற்ற வேண்டும், அதாவது சோவியத் யூனியனைப் போன்றதொரு பாட்டாளிகளின் அரசை முதலில் இந்தியாவில் இந்தியப் பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டும் என்று தானே பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் கடமை வேண்டுகிறது. இவ்வாறு புரிந்து கொள்வது தானே சரியானதாக இருக்கும்? லெனின், ஸ்டாலின் ஆகியோரின்  புரட்சிகர வழிகாட்டுதலின் கீழ் சோவியத் யூனியன் உலக வரலாற்றில் ஆற்றிய பங்கைப் போன்றதொரு பங்கினை ஆற்றுவதற்காக அத்தகையதொரு பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்தாமல் ஏகாதிபத்தியத்தின் கொடுந்தாக்குதலுக்கு எதிராக உண்மையான பின்னடைவைக் கொடுக்க இயலுமா ? அமைதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு  உண்மையான பாதுகாப்பை வழங்க இயலுமா ? 

1991 ல் சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப்புரட்சியின் போது என்ன நடந்தது என்பது பல தோழர்களுக்கு தெரியாது. பாட்டாளி வர்க்க சர்வதேசக் கடமையை நிறைவேற்றுவதற்கு உண்மையான அவசியமும் உண்மையான யதார்த்த சூழ்நிலையும் இருந்தபோது கட்சியின் தற்போதைய தலைமை என்ன செய்தது என்பதை நாம் நினைவுபடுத்திப் பார்ப்போம். சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி சதியை நிறைவேற்ற கார்பசேவினால் கொண்டுவரப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட எதிர்ப்புரட்சிக்கான சதி மேகங்கள் சூழ்ந்ததொரு சூழ்நிலையில் தங்களது கடைசிக்கட்ட போரில் போராடிக் கொண்டிருந்த தோழர் கென்னடி யாவெனிவ்-ன் தலைமையிலான " எட்டு உறுப்பினர்கள் புரட்சிகரக் கமிட்டி " க்கு ஒத்துழைப்பு தருமாறும் குறைந்த பட்சம் அதனை ஆதரித்து சில வார்த்தைகள் அல்லது ஆதரவுக்குரல் எழுப்புமாரும் கோரிய அழைப்பு ஓன்று SUCI க்கு வந்தது. அந்த எட்டு உறுப்பினர்கள் கமிட்டி SUCI கட்சியின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து 1991 -ல் சோவியத் மண்ணில் தங்களது நடவடிக்கையை தொடங்கும் முன்னர் தங்களது ஆவணங்கள் மற்றும் வேண்டுகோளை தங்களது செய்தி தொடர்பு முறையின் மூலம் SUCI ன் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் SUCI -ன் தற்போதைய தலைமை அதற்கு எவ்வாறு பதிலளித்தது ? அது தனது அறிக்கையின் மூலம் " அவர்கள் ( எட்டு உறுப்பினர் கமிட்டி ) செய்வதற்கும் மார்க்ஸிசம் - லெனினிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " , என்று கூறி அவர்களது நடவடிக்கையை கண்டனம் செய்தது. இந்த அறிக்கை P. Era - விலும் கட்சியின் பிற பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டது. ஆனால் ஏன் இத்தலைவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்பது இன்னும் வியப்பளிக்கக் கூடியதாகும். 

 " கம்யூனிசக் கருத்தின் படி புரட்சி என்பது சதிவேலை அல்ல " என்று தோழர். சிப்தாஷ் கோஷிடமிருந்து ( இந்தோனேஷியா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.என்.எய்டிட் - ன் தலைமையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற திடீர்ப் புரட்சி முயற்சி தோழ்வியடைந்தது பற்றி தோழர். சிப்தாஷ் கோஷ் எழுதிய கட்டுரையிலிருந்து ) SUCI கட்சி கற்றுக் கொண்டதனால் அவ்வாறு செய்ததாக பொதுச் செயலாளரே கூறினார். உண்மையில் தோழர். சிப்தாஸ் கோஷ் இதனை நூறு சதவீதம் சரியாகவே கூறியுள்ளார். இது கம்யூனிசக் கருத்தின்படி பொதுவான ஒன்றாக இருந்ததா ? ரஷ்யாவின் புரட்சிகர பாட்டாளி வர்க்கம் லெனின் தலைமையில் நீண்ட நாட்களுக்கு முன்னேரே தத்துவார்த்த ரீதியில் நிறைவு செய்து விட்ட சோசலிசப் புரட்சிக்கு எதிராக கோர்ப்ப சேவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சதிவேலை சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா?

SUCI - ன் தற்போதைய தலைமை எவ்வாறு சிப்தஷ் கோஷை புரிந்து கொண்டுள்ளது, மார்க்சியம் , லெனினிசம் - சிப்தாஷ் கோஷ் சிந்தனைகள் வழங்கும் கோட்பாட்டலவிலான சூத்திரங்களை மொழி பெயர்ப்பதில் எவ்வாறு கல்விப் புலமை ரீதியிலும் ( Academic )எந்திரகதியிலும் சம்பிரதாய ரீதியிலும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.பாட்டாளி வர்க்கம் தனது சிக்கலான வளைவுகளும் திருப்பங்களும் நிறைந்த முதலாளித்தவ  , ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் இத்தகைய தலைமையை நம்பியிருக்க முடியுமா ?

தாங்கள் உண்மையான புரட்சிகரக் கட்சி என்பதை நிரூபிப்பதற்கு SUCI - ன் தற்போதைய தலைமை :  " சிப்தாஷ் கோஷ் - அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு  வழி நடத்தப்பட்ட கட்சி " என்று அடிக்கடி தானே கூறிக் கொள்கின்றது. சந்தேகமின்றி அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவ்வாறு கூறிக் கொள்வதே பாதை விலகலுக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்க கலாச்சராத்திற்கு விரோதமான போக்குகள் மற்றும் தீமைகளுக்கு இரையாகாமல்  இருப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்டு அவராலேயே தலைமை தாங்கப்பட்டு அவருக்குப் பின் 30 ஆண்டுகளாக ஸ்டாலினால் வழி நடத்தப்பட்ட இரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியான CPSU வில் நடந்தது என்ன ? அக்கட்சி ஆற்றிய பங்கு என்ன? அதற்கு ஏற்பட்ட சீரழிவும் அதன் விளைவாக அது சந்தித்த விழ்ச்சியும் என்ன என்பதை உலகம் பார்க்கவில்லையா? லெனினின் கட்சியே சீரழிந்து  எதிர்ப் புரட்சியின் கருவியாக மாறியதைப் பார்த்த பின்னரும் , SUCI - கட்சி சிப்தாஷ் கோஷ் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு , வளர்க்கப்பட்டு , வழிநடத்தப்பட்ட கட்சியாக இருப்பதனால் அது தவறான வழியில் செல்ல முடியாது என்று கூறுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா ? கட்சியின் தலைமை சிப்தாஷ் கோஷை புரிந்து கொண்டுள்ளதா இல்லையா , இத்தலைமை, இன்றைய யதார்த்த உண்மைகளுடன் சிப்தாஸ் கோஷின் சிந்தனைகளை ஒருங்கிணைந்தது முழுமையாக்கி, அதன் மூலம் கட்சியையும் பாட்டாளி வர்க்கத்தையும் வழி நடத்தும் தகுதி உடையதா , இல்லையா என்பவையே முக்கியமான விசயங்களாகும். 

சில தலைவர்கள் , கட்சியின் தலைமை தவறுகள் பல செய்துள்ளது ; அது திருத்தல் வாதத் தலைமையாக மாறி விட்டது; அது தவறான முறையில் பல தோழர்களை வெளியேற்றி விட்டது. - என்று கூட ஒப்புக் கொண்டாலும் அதன் காரணமாகவே கட்சி பாட்டாளி வர்க்கக் கட்சி அல்ல என்று கூற முடியுமா ? என்று கூட வாதம் செய்கின்றனர். மேலும் அவர்கள் குருசேவ் திருதல்வாதியாக இருந்தார். ஆனால் CPSU - வை குருசேவ் தலைமை தாங்கும் போதே நாம் CPSU ஒரு கம்யூனிஸ்ட் கட்சி  அல்ல என்று கூறினோமா ? என்றும் வாதிடுகின்றனர். 

இத்தலைவர்கள் , பிரச்னைகள் பற்றி தாங்களே குழம்பியவர்களாக இருப்பார்கள் அல்லது சாதராணத் தோழர்களின் குறைந்த அளவிலான புரிந்து கொள்ளும் திறனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிகவும் சாமர்த்தியமாக அவர்களுக்கு தவறான வழியைக் காட்ட முயற்சிப்பவர்களாக இருப்பார்கள். CPSU கட்சியின் இறந்த உடலிலிருந்து துர்நாற்றம் பரவத் துவங்கும் வரையிலும், அரசியலின் அடிச்சுவடி கூட அறியாத சாதராண
மனிதன் கூட அக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இப்பொழுது இல்லை என்று சொல்ல முடிந்த போதிலும் CPSU ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்பதை நாம் ஏன் சொல்லவில்லை அல்லது ஏன் சொல்ல முடியவில்லை? மாறிவரும் யதார்த்தங்களுடன் நாமும் நகர்ந்து வர இயலாமல் போனமைக்கு இதைக்காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? திருத்தல்வாத குருசேவினால் தலைமை தாங்கப்பட்ட CPSU - வே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்று கூறாத நாம் SUCI - யினை மட்டும் எப்படி அவ்வாறு கூற முடியும் என்று கூற கட்சி என்ன குருட்டுத்தனமான பின்பற்றிச் செய்யும் வாலா?
ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லாமல் போய் - விட்டதா , இல்லையா ? என்று ஒரு கட்சியைத் தீர்மானிப்பதற்கான கேள்வியும் ஒரு குறிப்பிட்ட அரசு இன்னமும் சோஷலிச அரசாக உள்ளதா இல்லையா ? என்று ஒரு அரசைத் தீர்மானிப்பதற்கான கேள்வியும் ஓன்று அல்ல என்பதை இத்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச கம்யூனிச இயக்கம் ஸ்டாலின் தலைமையில் இருந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் (COMINFORM ) டிட்டோ - வின் பிரச்சனையை கையாளும் போது ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லாமல் போய் விட்டதா இல்லையா என்று தீர்மானிப்பதற்குரிய அடிப்படைகளை வகுத்துள்ளது. கம்யூனிஸ்ட் அகிலம் அப்பிரச்சனையை இவ்வாறு கையாண்டது: டிட்டோ திருத்தல் வாதியாக சீரழிந்து விட்டார் என்று முடிவுக்கு வந்ததன் பேரில் கம்யூனிஸ்ட் அகிலம் , யுகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் லீக் கட்சிக்கு அதன் தலைவரை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தது.ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் விதத்தில் அக்கட்சி நேர்மாறனதைச்  செய்தது. அது தனது கட்சி மாநாட்டின் மூலம் டிட்டோவுடன் தனதுமுழுமையான  ஐக்கியத்தை வெளிப்படுத்தியது. மேலும் டிட்டோவே கட்சியின் ஆயுட்கால தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தது. அதன்பேரில் கம்யூனிஸ்ட் அகிலம் , கட்சி முழுமையும் டிட்டோ வாத சீரழிவிற்கு உட்பட்டு விட்டது, அது இனிமேலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல என்ற முடிவுக்கு வந்தது. இம்முடிவின் அடிப்படையில், யுகோஸ்லாவியா பாட்டாளி வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது. அந்த அளவிற்குச்செல்வதற்குக் கூட கம்யூனிஸ்ட் அகிலம் தயங்கவில்லை . 

இதன்மூலம் , கட்சியின் தலைமை பாதைவிலகியோ சீரழிந்தோ போய்விடும் போது , மீதமிருக்கும் கட்சியின் அனைத்து மட்டங்களும் தலைமையுடன் எவ்வித முரண்பாடும் கொள்ளாமல் அத்தலைமையின் பின்னால் உறுதியாக ஒன்றுபட்டு நிற்கின்றது எனில் அக்கட்சி முழுமையும் பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான கட்சியாக சீரழிந்து விட்டது என்றே புரிந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.  

தற்போது கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பப்படும் திருத்துதல் மற்றும் உயர்த்துதலுக்கான போராட்டம் என்று சொல்லப்படும் போராட்டம் மற்றொரு கேலிக் கூத்தாகும். இப்போராட்டத்தின் வடிவம் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் குறிஎல்லையினை விளக்கும் " இக்காலகட்டத்தின் முக்கியத் தேவை " ( The Prime need of the Hour ) என்று பெயரிடப்பட்ட சிறிய புத்தகத்தில் லெனின் - ஸ்டாலின் - காஹானோவிச் - மாவோ - சிப்தாஸ்கோஷ் ஆகியோர் கட்சி அமைப்பு பற்றி வெவ்வேறு தருணங்களில் கூறியவையே மீண்டும் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இங்கு கட்சி சந்தித்துக் கொண்டிருக்கும் யதார்த்தமான பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய பாதையை காட்டுவதற்குரியவைகள் எதுவும் அதில் இல்லை. யதார்த்தமான உண்மைப் புறச்சூழ்நிலைகளை தனது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்த  கொள்ள இயலாத இத்தலைமையின் இயலாமைக்கு ஓர் குறிப்பான உதாரணமாகவே இச்சிறிய புத்தகம் விளங்குகின்றது. எனவே திருத்துதல் மற்றும் உயர்த்துதலுகான அப்போராட்டம் நிச்சயம் தோல்வியையே தழுவும் என்பதில் எவ்வித   சந்தேகமும் இல்லை. அப்போராட்டம் கட்சியில் எதனையும் திருத்தவுமில்லை. எவரையும் உயர்த்தவுமில்லை என்றாலும் கூட , தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக அடிப்படையற்ற பொய்யாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், அதன் விளைவாக அவர்களுடன் மாறுபாடு  கொண்ட பிற தோழர் அல்லது தோழர்களை திருப்திபடுத்துவதற்காக கட்சித் தலைமையின் ஆசீர்வாதத்துடன் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அல்லது கட்சியிலிருந்து வெளித்தள்ளுவதற்கும் கட்சியில் அதிகாரப் பதவிகளில் வைக்கப்பட்டிருக்கும் சில தலைவர்களின் கையில் ஓர் ஆயுதமாக பயன்பட்டது.

ஹரியானாவில் தோழர் கியான் சிங்கும் பிற தோழர்களும், மேற்கு வங்காளத்தில் தோழர் பாடிக் கோஷ்ம் தமிழ்நாட்டில் தோழர். ஜெகநாதனும் ஆறு மாநில கமிட்டி உறுப்பினர்களும் நீக்கப்பட்டதற்கும் கேரளாவில் தோழர் ஜேம்ஸ் ஜோசப் கட்சியை விட்டு வெளித் தள்ளப்பட்டதற்கும் பின்னணியில் மிகச் சரியாக இதுவே நடந்தது.

இப்பொழுது அத்தோழர்கள் அனைவரும் மனச்சோர்வுடைய  கட்சி  விரோத சக்திகள் என்று அத்தோழர்களுக்கு எதிராக கட்சித் தலைவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் அவர்களில் எவரும் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளுடனோ, முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிஸ ப் புரட்சி என்ற கட்சியின் அடிப்படை அரசியல் வழியுடனோ எவ்வித கருத்து வேறுபாடுகளையும் எப்பொழுதுமே எழுப்பியதில்லை. சிப்தாஸ் கோஷின் சிந்தனைகளுக்கு எதிராக செல்வதாகவோ அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதாகவோ தோழர்கள் மீது கண்மூடித்தனமாகவும் தெளிவற்ற வகையிலும் குற்றம் சாட்ட முற்படுவதற்கு முன்னர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் என்பது மிகச் சரியாக எதைக் குறிக்கின்றது ?  அதன் தனிச் சிறப்புக் கூறுகள் என்ன ? எவ்வாறு அது மார்க்சிசம் - லெனினிசக் கருவூலத்துடன் சேர்க்கத் தக்கதாக வரலாற்று ரீதியில் வெளிப்பட்டது ? ஆகியவற்றை உறுதியாகவும் தெளிவாகவும் வரையறுக்க வேண்டியது கட்சித் தலைமையின் கடமையாகும்.

கட்சி மாநாட்டிற்கு முந்தைய மத்திய கமிட்டி ஒருமுறை, தங்களது சொந்த நினைவாற்றலின் அடிப்படையில் சிப்தாஸ் கோஷ் சொன்னதாகவோ செய்ததாகவோ கூறப்படும் சரிபார்க்கப்படாததும் சரிபார்க்கவே இயலாதது மான கதைகளை கூறுவதற்கு எதிராக - குறிப்பாக அப்போதைய மத்திய கமிட்டியின் விரிவாக்கப்பட்ட மத்தியக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளும் சில தோழர்களுக்கு எதிராக - கடுமையான கட்டுப்பாட்டையே விதித்தது  என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகும். அத்தோழர்கள் அனைவரும் இன்று தற்போதைய மத்தியக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மேலும் தற்போதைய தலைமை, சிப்தாஸ் கோஷின் சிந்தனைகள் என்றால் என்ன - அதன் நோக்கம் மற்றும் எல்லைகள் எவை - என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் வரையறுக்க வேண்டிய தனது கடமையை செய்வதற்கு தவறியதன் மூலம் யார் வேண்டுமானாலும் இது தான் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகள் என்று ஏதேனும் ஒரு கட்டுக்கதையை கூறுவதற்கும் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளில் இருந்து விலகிச் சென்று விட்டதாக எந்தத் தோழர்கள் மீதும் மிகவும் தெளிவற்ற , பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கும் ஏதுவாக  தனது கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

சிப்தாஸ் கோஷ் - உடன் இருந்தவர் என்றோ மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் என்றோ வலியுறுத்திக் கூறுவதில் இதைப் பொறுத்தவரை எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் , மாசேதுங்குடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் லீ ஷோ கி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்காக அவர் மா சே துங் - ஐ நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்று எவரும் நினைக்க முடியுமா ?

நேர்மையான தோழர்கள் அனைவரும் மேலே விவாதிக்கப்பட்ட விசயங்களின் துணை கொண்டு மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். மார்க்சிசம் - லெனினிசம் - சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளே பாட்டாளி வர்க்கப் புரட்சியை உருவாக்குவதற்கும் அதனை இறுதி வரை வழிநடத்தி செல்வதற்கும் உரிய பாதையை காட்டவல்ல ஒரே தத்துவார்த்த கலங்கரை விளக்கமாகும் இதில் எவ்வித தடுமாற்றமும் இருக்க முடியாது SUCI - கட்சியின் தவறுகளும் , போதாமைகளும் - அவற்றின் பரிமாணமும் குணாம்சமும் எத்தகையதாக இருப்பினும் அவையனைத்தும் - உட்கட்சிப் போராட்டத்தின் மூலமாக திருத்தப்படக் கூடியவையே என்று இன்னமும் கருதிக் கொண்டிருப்பவர்கள் அப்போராட்டத்தை உண்மையான ஆர்வத்துடனும் , உறுதியுடனும் இப்பொழுதே துவக்குங்கள். பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் சிப்தாஸ் கோஷ் (கீழ்க்கண்டவாறு ) நமக்குக் கற்றுக் கொடுத்ததை நாம் மறக்காதிருப்போம் : " கட்சி உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் தத்துவார்த்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கு - எந்தவொரு விசயத்தையும் மார்க்சிசம்- லெனினிசத்தின் அளவுகோல் கொண்டு தீர்மானிக்கக்கூடிய அறிவை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் படிப்படியாக உருவாக்குவதும் , வெறிவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெறுத்து ஒதுக்கக்கூடிய வகையில் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பதும், தவறுகளைச் சுட்டிக் காட்டிய பின்னரும் கட்சித் தலைமை தனது தவறுகளை திருத்திக் கொள்ள மறுக்கும் போது அத்தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழும் உணர்வை உருவாக்குவதும் கட்சித்தலைமையின் கடமையாகும்" .

"SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)"  நூல் 2002 ல்கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் ,தமிழ்நாடு-   வெளியிடப்பட்டது . 

No comments:

Post a Comment